10 வயது சிறுமிக்கு தின்பண்டம் கொடுத்து ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவி, பள்ளியில் கடந்த இரண்டு நாளாக சோர்வாக இருந்து உள்ளார். இதை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர், அந்த மாணவியிடம் விசாரித்து உள்ளார்.
அப்போது, அந்த மாணவி தன்னிடம் இரண்டு பேர் தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியர், உடனே பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். பெற்றோர் வந்து சிறுமியிடம் விசாரித்து விட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது, 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகியது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.
போலீசார் சிறுமியிடம் விசாரித்த நிலையில், ராஜேந்திரன் மகன் ராஜேஷ் வயது 35, கருப்பன் மகன் முகிலரசன் வயது 40 ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என்று தெரிய வந்தது.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல், முகிலரசனுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததும், அப்பகுதி சிறுவர்கள், சிறுமிகளுக்கு நொறுக்கி தீனி அவ்வப்போது வாங்கிக்கொடுத்து பேசி வருவதும் வாடிக்கையாக இருந்தது தெரிய வந்தது.
அத்துடன், அவர்கள் இருவரும் அந்த பகுதியில் சில பெண்களை ஆபாசமாக போட்டோ எடுத்தும் வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அப்படியாக, 10 வயது சிறுமிக்கும் அடிக்கடி நொறுக்கி தீனியை வாங்கிக்கொடுத்து, ராஜேஷ் மற்றும் முகிலரசன் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார், ராஜேஷ், முகிலரசன் இருவர் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.