உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மாவின் படைப்பு காலம் முடிவடைந்து, ஊழிக்காலம் தொடங்கிய போது, மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினார். பிரம்மனின் அடுத்தக்கட்ட பகல் தொடங்கியதும் தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் மட்டும் பிரம்மனின் காதுகளில் சென்றன. உடனே விழித்துக்கொண்ட பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார்.
அப்போது அவரின் காதுகளிலிருந்து அசுத்தத்துடன் அந்த தண்ணீரும் வெளியே வந்து, மது, கைடபர் என்ற அரக்கர்களாக உருவெடுத்தன. அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறிய தேவர்கள், இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்று எண்ணி பகவானிடம் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார்.
ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே.. உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் என்று பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள். மேலும், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.
எம்பெருமானே.. தாங்கள் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளியே வரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.