“சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19 ஆம் தேதி விசாரித்து அன்றே, உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று, உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
“திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக” நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011 – ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், “தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி” சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அப்போது, இந்த வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பிறகு, இந்த வழக்கு பட்டியலிடப்பட்வில்லை.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல் துறை ஆஜரான வழக்கறிஞர் முகிலன், “இது இந்திய தண்டனைச் சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு” என தெரிவித்தார்.
இதனையடுத்து, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், “இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, “இந்த வழக்கை வரும் 19 -ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி, அன்றே இந்த வழக்கு முழுவதுமாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றும், தெரிவித்து உள்ளார்.