ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல் பாடிய இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
“சுவாமி ஐயப்பனை பற்றியும், ஐயப்பனை வழிபடும் பக்தர்களின் விரதம் குறித்தும், ஐயப்பனின் மகிமை குறித்தும் அவதூறாக பாடல் பாடியதாக” கூறி, கானா பாடகி இசைவாணிக்கு எதிரான சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வந்தனர்.
அதாவது, கடந்த 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட பாடல் தற்போது வைரலான நிலையில், இது குறித்து சில இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, பாடகி இசைவானிக்கு எதிராக சிலர் வேண்டும் என்றே அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பாடகி இசைவாணி அளித்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன், ஜோதி நாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அத்துடன், “எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று, உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று, நிபந்தனை விதித்து நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.