சென்னை முகப்பேர் கிழக்கு பாரிச்சாலை பகுதியில் கார் பார்க்கிங் தொடர்பான தகராறில் நீதிபதி மகனை தாக்கியதால் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் இருவர் மீதும் பெண் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த நீதிபதி மகன் ஆத்திசூடி மற்றும் மகேஷ்வரி ஆகிய இருவரும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகர் தர்ஷன் மற்றும் அவரின் சகோதரர் லோகேஷ் இருவர் மீது ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தகராறு தொடர்பாக நடிகர் தர்ஷன் தரப்பில் புகார் அளித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தற்போது நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவரையும் கைது செய்திருக்கின்றனர். தர்ஷன் வீட்டின் அருகே கார் பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றதால், தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல் தர்ஷன் கொடுத்த புகாரில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் தர்ஷன் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பார்க்கிங் தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.