ஈரானிய கொள்ளையர்கள் தொடர்ந்து, சென்னையில் நுழைந்த அடுத்தடுத்து குற்றங்களை அரங்கேற்றும் தின்பஹாரியா திருட்டு வட மாநில கும்பலால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.
வெறும் ஆயிரம் ரூபாய் கூலிக்காக, சென்னையில் செல்போன் திருட வரும் தின்பஹாரியா திருடர்கள் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? ஆனால், இது தான் உண்மை. தின்பஹாரியா திருடர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்…
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL கிரிக்கெட் போட்டி கடந்த 28 ஆம் தேதி நடந்த போது, சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் செல்போன்களை ஒரு குறிப்பிட்ட வட மாநில கும்பல் கவனத்தை திசைத் திருப்பி திருடிச் சென்றது அனைவரும் அறிந்த விசயம்.
இதில், 20 க்கும் மேற்பட்ட புகார்கள் செல்போன் திருட்டுச் சம்பவம் தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, இந்த வழக்கு குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடியபோது, செல்போன்களை திருடிய ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆகாஷ் நோநியா, விஷால் குமார் மாட்டோ, கோபிந்த் குமார் இவர்களுடன் 4 சிறுவர்கள் என மொத்தம் 8 நபர்களை கடந்த 1 ஆம் தேதி வேலூரில் வைத்து திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த 8 பேரிடம் இருந்தும் 38 செல்போன்கள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன், இந்த கும்பலின் கூட்டாளிகள் வேலூரில் பதுங்கி இருப்பதாகவும், சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சென்னை போலீசார், வேலூர் போலீசாரை உஷார் படுத்தினர். இதனையடுத்து, அந்த கொள்ளை கும்பல் தலைவனும் கைது செய்யப்பட்டான்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஷாகினி, ராகுல் குமார், மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோரையும் சேர்த்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் வேலூரில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்ததும், சென்னை வந்து கிரிக்கெட் மைதானம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொது மக்களிடம் செல்போன்களை திருடிவிட்டு தப்பிச் சென்று உள்ளதும் தெரிய வந்தது.
அத்துடன், கடந்த 1- ஆம் தேதி கைது செய்யப்பட்ட 8 பேரும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேலும் 3 பேரும் என இந்த 11 பேரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்து உள்ளது. தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட 3 நபர்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக 31 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த கைதான 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவர்களில் ராஜ்குமார், ஆகாஷ் நோகியா, விஷால் குமார் மாட்டோ, கோவிந்த் குமார் ஆகிய நான்கு பேர் இந்த கும்பலின் தலைவர்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
இந்த கும்பல்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தின்பஹர் கிராமத்தில் இருந்து அங்குள்ள சிறுவர்களையும், இளைஞர்களையும் திருட்டு தொழிலில் ஈடுபடுத்த தினக்கூலி ரூபாய் 1000 என்ற அடிப்படையில் அழைத்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இப்படி அழைத்துவரப்படும் இந்த சிறுவர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உறவினர்களாக இருப்பார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இப்படியாக, வட மாநில கும்பல் ரயில் மற்றும் விமானம் மூலம் பயணம் செய்து ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மார்கெட், மால், பீச் மற்றும் கிரிக்கெட் நடக்கும் இடங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
இப்படி இது வரை கைது செய்யப்பட்ட 2 கும்பலில் மொத்தம் 11 நபர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து 74 செல்போன்கள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இப்படி, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்களது செல்போன்கள் சென்னை கோயம்பேடு, வட பழனி ஆவடி புரசைவாக்கம் ஐசிஎப், மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் பெங்களூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் திருட்டு போனது என்றும், தெரிய வந்திருக்கிறது. இந்தப் பகுதிகள் அனைத்திலும் கூட்டமான இடத்தில் இந்த தின்பகாரியா கும்பல் கைவரிசை காட்டியது தெரிய வந்து உள்ளது.
முக்கியமாக, சென்னையில் செல்போன்களை திருடிய பிறகு, அவர்கள் தின்பஹார் கிராமத்தில் சென்று மாவால்ட் பகுதியில் உள்ள சந்தையிலும், மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச எல்லை பகுதிகளிலும் விற்பனை செய்வதும் தெரிய வந்திருக்கிறறது. இந்த கும்பல் கவனத்தை திசை திருப்பி திருடுதல் மற்றும் பிக்பாக்கெட் ஆகிய தொழில்கள் செய்ய இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களை பயிற்சி கொடுத்ததும் அவர்களை ஊரில் இருந்து சென்னை அழைத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதே போன்ற கும்பல்கள் எத்தனை பேர் தமிழகத்தில் உள் நுழைந்து உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் முன்னதாக மும்பை அம்பிவாலி பகுதியில் இருந்து செயின் பறிப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டு ஈரானிய கொள்ளையர்கல், சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் கைவரிசை காட்டி, விமான மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அதில் ஒருவர், விசாரணையின் போது தப்பிச்செல்லும் போது என்கவுண்டர் என்று சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் நமக்கு நினைவில் இருக்கும். தற்போது, அதன் தொடர்ச்சியாக, சென்னையில் மீண்டும் தின்பாஹாரிய வட மாநில கும்பல் சென்னைக்குள் நுழைந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சென்னை மக்களை அச்சத்தியல் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.