Mon. Jun 30th, 2025

அமித் ஷா வருகையும், அன்புமணி நீக்கமும்….

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும் என்பது கிராமத்தின் சொலவடை. அதற்கு இருவேறு அர்த்தங்களை கூறுவார்கள். ஆனால் அது நமக்குத் தேவையில்லை.. ஊரான் பிள்ளையை ரெண்டாக்கினால் நம் பிள்ளைக்கு வாய்ப்பு என்பது பாஜகவின் கணக்கு.. 

எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ அதனுள் பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் பார்க்கும் வித்தையில் கை தேர்ந்து இருக்கிறது காவிக் கட்சி. இல்லையென்று மறுப்பவர்களுக்கு ஆதாரம் காட்ட பீகார், மகாராஷ்ட்ரா என வரிசையாக இருக்கிறது சாட்சி.

அதன் ஆக்டோபஸ் கரங்கள் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றுபட்ட அதிமுகவுக்குள், பாஜக ஆடிய சடுகுடு ஆட்டத்தை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. சசிகலா விரட்டியடிக்கப்பட்டதும், டிடிவி தினகரன் திகாருக்கு பார்சல் செய்யப்பட்டதும் யாரால்.. ஒன்றாயிருந்த இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கலகம் மூட்டி விட்டதும், கருங்காலி மரமாய் போலி தர்மயுத்தம் நடத்த உத்தரவு பிறப்பித்ததும் யார்?.. இப்போது கட்டுச்சோத்துக்குள் பெருச்சாளியை வைத்து கட்டிய கதையாக செங்கோட்டையனை விட்டு கள்ளாட்டம் ஆடுவது யார்?… அனைத்தும் டெல்லி எனும் குரங்காட்டி வித்தைக்காட்ட இங்கு குட்டிக்கரணம் அடிக்கின்றனர். இது அதிமுகவுக்குள் நடக்கும் கதை என்றால்…

தைலாபுரத்துக்காரர்கள், கிலோ கணக்கில் தைலம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும் அதே மேலிடத்து ரிங் மாஸ்டர்களால்தான்.. பாமகவில் அன்புமணியின் இடம் என்பது டபுள் கான்கிரீட் பீம் போட்டதற்கு சமம். அதனையே அசைத்துப் பார்க்க வைத்தது பீம்பாயின் சித்து விளையாட்டுக்கள் தான்.

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி பாமக பொதுக்குழுவில் இளைஞர் அணித் தலைவர் நியமனம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே வெளிப்படையாக மேடையிலேயே மோதல் வெடித்தது.

எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. அப்படிப்பட்ட ஒரு கட்சியின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என்று அந்த வெட்டுக்காயத்திற்கு வெளிப்பூச்சு பூசினார் அன்புமணி. இது நான் உருவாக்கிய கட்சி என்று மேடையிலேயே சீறி இருந்தார் மருத்துவர்.

பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையே இந்த அடிதடி அம்பலம் ஏறக் காரணம் என்ற பேச்சு அடிபட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகு பனையூரில் தனி அலுவலகம் கண்ட அன்புமணி, நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

இந்த சூழ்நிலையில் தான் தைலாபுரத்தில் இன்று பேசிய மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று கூறியுள்ளார். அன்புமணி செயல் தலைவர் என்றும், ஜி.கே.மணி கௌரவ தலைவர் என்றும் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அன்புமணியால், பாமகவை வழிநடத்த முடியவில்லை என்று அவரே கூறுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

பிரச்னை என்னவென்றால், அதிமுக – திமுக இரண்டில் ஏதேனும் ஒன்றில் கூட்டணி வைக்க வேண்டும் என்பது மருத்துவர் ஐயாவின் நிலைப்பாடு. (அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அது பாஜகவுடன் தான் என்பதை ஐயாவுக்கு யார் சொல்வது).. ஆனால் சின்ன ஐயாவுக்கோ, பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் அல்லது நிர்பந்தம்..

அதன் எதிரொலியாகத் தான் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் கூட வாக்களிக்காமல் புறக்கணித்தார் அன்புமணி. புறக்கணிப்பு என்பது பாதி ஆதரவு என்பதற்கு சமம் தானே.. கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய முடிவை அன்புமணி எடுத்திருக்கக் கூடும்.

இந்த சூழ்நிலையில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனியாவர்த்தனம் செங்கோட்டையன் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். கூடவே அன்புமணி, பாரிவேந்தர் போன்றவர்களும் வரிசையில் உள்ளனர்.

பாமகவுக்கு தலைவராக (அன்புமணி) இருக்கும்வரைதானே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு ஆகியவை குறித்து முடிவு எடுக்க முடியும்.. ஒருவேளை தலைவராகவே இல்லையென்றால் எப்படி முடிவு செய்வாய் என்று இறங்கி அடித்திருக்கிறார் பெரிய ஐயா மருத்துவர். தைலாபுரம் பின்னால் செல்வதா? பனையூருக்கு படையெடுப்பதா? என்று குழப்பத்தில் இருப்பது என்னவோ பாமக நிர்வாகிகள் தான்.

இதற்கு அத்தனைக்கும் மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டுவிட்டுத் தான் சென்னைக்குள் அடியெடுத்து வைக்கிறார் அமித் ஷா. தந்தையும் தனயனும் ஓரணியில் நிற்பார்களா? அவர்களை பிரித்து வைத்து ஆட்டம் நடக்குமா? என்பது அமித் ஷா வந்து போன பின்னர் தெரிந்து விடும்.

இப்போது கட்டுரையின் முதல்வரியை படியுங்கள். இன்னும் பொருத்தமாக இருக்கும்.

– க.அரவிந்த்குமார்

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *