அரசியலில் எதிரெதிர் துருவங்களில் நிற்பவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பதில் புதுமை ஏதும் இல்லை. வடஇந்தியாவில் இத்தகைய நிகழ்வுகளை மிக சாதாரணமாக நம்மால் காண முடியும். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய மசோதா மீதான விவாதத்தில் கருத்து ஏவுகணைகளை வீசிக்கொண்டவர்கள், வாக்கெடுப்பு முடிந்த உடனேயே ஒன்றாக சிரித்தபடி தேநீர் அருந்திய புகைப்படங்களை நாம் பார்த்துள்ளோம்..
அதுபோன்றதொரு எளிய நிகழ்வாக கடந்து விட வேண்டுமா?… பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சந்திப்பை…
சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே எஞ்சி உள்ள நிலையில், அரசியல் களத்தில் தேநீர் விருந்தைக் கூட எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அந்தவகையில், சீமான் – அண்ணாமலை சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
என்ன ஒரு சிக்கல் என்றால்.. நேற்று நிர்மலா சீதாராமனை சந்தித்தீர்களா என்றால் அதற்கு கொந்தளித்த சீமான் தான், இன்று அன்பு இளவல் அண்ணாமலை என்று விளிக்கிறார். பதிலுக்கு அண்ணாமலை சீமான் அண்ணன் ஒரு போர்த்தளபதி என்று புகழாரம் சூட்டுகிறார் அண்ணாமலை.
அடிப்படையாக சில கேள்விகள் தான்.. எஸ்ஆர்எம் மேடையில் தமிழ் மொழியின் பெருமைகளை நெஞ்சு விம்ம, நரம்பு புடைக்க பேசிய சீமான், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முழங்கினார். அதேசமயம், உலகம் முழுவதும் பயணிக்கும் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள், திருக்குறளை விதந்தோதுகிறார் என்றும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். இந்த முரண்நகையை என்னவென்று சொல்வது. தமிழுக்கு பாடைகட்டும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக முழங்கிவிட்டு, அதனை செயல்படுத்த எத்தனிக்கும் பாஜகவின் தலைமைப்பீடத்தில் இருப்பவரான பிரதமரை புகழ்வது எந்தவிதத்தில் சரி?..
இதுநாள்வரை கூட்டணி கிடையாது தனித்தேப் போட்டி என்று பேசிவந்த சீமான், பிரதமரின் ராமேஸ்வரம் வருகைக்குப் பின்னர் தடம்புரண்ட ரயிலாக பிறழ்வது ஏன்?..
தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன் நான்.. அண்ணன் சீமானே தமிழில் தேசியத்தைத் பார்க்கிறார் என்று அண்ணாமலை புதுவிளக்கம் தருகிறார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக களமாட எந்தவொரு எல்லைக்கும் செல்ல பாஜக தயாராக உள்ளது. அதனால் தான் அதிமுகவுக்குள் செங்கோட்டையனை கொம்புசீவி விடுகிறது. ஜல்லிக்கட்டு காளையாக துள்ளித் திரிந்த சீமானை, அடிமாட்டுக்கு கொண்டு செல்ல பார்க்கிறது. இதுவரை பூகம்பமாக இருந்த சீமான், இப்போது பூம்பூம் மாடாக மாறிவருகிறார் போலும்..
தமிழ்த் தேசியம் என்ற கொள்கைப்பாட்டில் கிட்டத்தட்ட பாஜகவின் பெரும்பாலான கொள்கைகளையேத் தான் சீமான் பேசிவந்தார். இப்போது தன்னுடைய கொட்டடியில் போய் நிற்கிறார் என நினைக்கிறேன்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிகளை பெறாவிட்டாலும், அங்கீகாரம் பெற்ற கட்சியாக இன்று நாம் தமிழர் வளர்ந்து இருக்கிறது என்றால் அது தொடர்ச்சியாக தனித்துப் போட்டியிட்டதே காரணம். எதிர்வரும் தேர்தல் சொல்லிவிடும் நாம் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை…
– க.அரவிந்த்குமார்