90களில் சிறுவனாகச் சேலத்து திரையரங்குகளில் திரைப்படங்களை ரசிப்பது எனது மிக முக்கிய பொழுதுபோக்கு! அப்போதைய சேலத்து மக்களுக்கான மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களுள் திரைப்படங்களும் ஒன்று!
ஆதர்ஷண நாயகர்களின் திரைப்படத்துக்கான டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு புகழ்பெற்ற சேலம் மூன்று தியேட்டரின் சப்ணா திரையரங்க ராம்பில் குதூகலமாகச் சென்றது மறக்க முடியாத 90’ஸ் நினைவு! “அண்ணாமலை”, “பாட்ஷா” ஆகிய சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் 90களில் கொடுத்த மகிழ்ச்சி இப்போதும் என்னுள்ளே உதட்டில் மெல்லிய புன்னகையை வரவழைக்கும்.
திரைப்படம் முடிந்த பிறகு கொண்டாட்ட மன நிலையில் வெளிவரும் மக்களைப் பார்க்க அப்போதைய சிறுவனான எனக்குப் பேரானந்தமாக இருக்கும்! சேலத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படியான பார்வையாளர்களைப் பார்க்க முடியும்!
காமெடி, செண்டிமெண்ட், நல்ல சண்டைக்காட்சி, சோகம்… என நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதற்கான எவ்விதமான காட்சிகளாக இருந்தாலும் கைத்தட்டி ரசிக்கக் கூடிய பார்வையளர்களை அப்போது அதிகம் பார்த்திருக்கிறேன்! இது போன்ற திரைப்படங்கள் சார்ந்த நினைவு பல ஊர்களில் பலருக்கும் இருக்கலாம்! அதுவும் திரைப்படங்கள் மட்டுமே பெரிய பொழுதுபோக்கு என்றிருந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குத் ‘தியேட்டரில் சினிமா’ என்பது உள்ளக் களிப்பைக் கொடுக்கும் சொற்றொடர்.
அப்படியான நாஸ்டால்ஜிக் நினைவுகளை நேற்றிரவு கொடுத்தது அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்! இப்போதைய டிரெண்டிங்கில் சொல்ல வேண்டுமென்றால் AK’வின் திரைப்படம்!
காலையிலேயே படத்தைப் பார்த்துவிட்டு எண்டார்பின்கள் அளவுக்கு மீறி ஊறிக்கொண்டிருந்த எனது சேலத்து இளம் பிராயத்து நண்பன் மோகன் படத்தைப் பற்றி சிலாகிக்க, எனக்கும் திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ‘சிறுவயதில் நாம் பார்த்த திரையரங்க கொண்டாட்டங்களை நிச்சயம் நினைவுப்படுத்தும்…’ என அவன் உசுப்பற்ற திருப்பத்தூர் CKC திரையரங்கில் இரவுக் காட்சிக்கான முன்பதிவு செய்துவிட்டு குடும்பத்தோடு தரையிறங்கினோம்!
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே ‘கடவுளே… அஜித்தே…’ என அஜித் ரசிகர்கள் திரையரங்கம் முழுவதும் ஆரவாரம் செய்ய, கொண்டாட்ட மனநிலை பற்றிக்கொண்டது! ரசிகர்களோடு முதல் நாளில் திரைப்படங்களைப் பார்ப்பதும் அலாதியான அனுபவம் தான்! ரஜினி, கமல், விஜய், அஜித்… ஆகியோரின் வெற்றிப் படங்களை முதல் நாளில் ரசிகர்களோடு பார்ப்பது தனி ஃபீல்! 70’ஸ் கிட்ஸ் முதல் இப்போதைய 2K கிட்ஸ் வரை இதைத் தவறாமல் அனுபவித்து இருப்பார்கள்.
80, 90களின் பாடல்களைப் பின்னணியில் ஓட விட்டு காட்சியமைப்பை மேற்கொண்டதில் மூன்று தலைமுறைகளையும் ஒன்றிணைந்துவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்! இளையராஜாவின் ராஜாங்க முத்திரையான ‘இளமை இதோ இதோ…’ பாடலுக்கு அஜித்தின் சண்டைக் காட்சி, மழைப்பகுதியின் உச்சியில் நின்றுகொண்டு சில்லெனும் சூழலுக்கு சூடான தேநீரைப் பருகுவது போன்ற ரொமாண்டிக் உணர்வைக் கொடுத்தது! இப்படி பல நாஸ்டால்ஜிக் பாடல்கள் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன! நேரடியாக அனுபவித்து உங்கள் சிறுவயதுக்கு நினைவுகளுக்குச் செல்லுங்கள்!
அஜித்குமாரின் பழைய திரைப்படங்களின் ரெஃபரன்ஸ்களை ஆங்காங்கே வைத்தது, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இண்டெர்வல் ப்ளாக்கில் தளபதி விஜய்யின் புகழ்பெற்ற ‘Iam waiting…’ வசனத்தைத் தல அஜித் அவரது பாணியில் சொல்லும் போது, திரையரங்கத்தின் உச்சியைப் பிளக்கிறது பார்வையாளர்களின் சத்தம்.
நக்கல், நையாண்டி, ஆக்ரோஷம், கோபம்… சண்டைக்காட்சி என அநாயாசமாக நடித்திருக்கிறார் Ak! மற்ற நடிகர்களுக்கான காட்சி அமைப்பும் கைத்தட்டல்களைப் பெறுகின்றன! வில்லன் அர்ஜுன் தாசுக்கான மிக முக்கிய திரைப்படம் இது! ‘ஒத்த ரூபா தாரேன்…’ பாடல் கொடுத்த வைப், இன்னும் பல மாதங்களுக்கு இன்ஸ்டா இளைஞர்களுக்கான அடிப்படைப் பாடலாக இருக்கும்! ஒரு மாஸ் திரைப்படத்துக்குத் தேவையான வசனங்களும் பெரிய அளவில் ஸ்கோர் செய்கின்றன!
அஜித்குமாரைச் சலிக்க சலிக்க ரசிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தாராளமாக இரண்டு முறை திரையரங்குகளில் பார்க்கலாம்! ஜி.வி.பிரகாஷின் இசை பாட்ஷாவுக்கு தேவா கொடுத்த ஹைப்புக்கு இணையாக இருக்கிறது. த்ரிஷா, ரெடின் கிங்க்ஸ்லி, மகனாக நடித்த டீன் ஏஜ் இளைஞன், சுனில் என அனைவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக அஜித்குமாருக்காகக் கொடுத்திருக்கிறார்கள்!
படம் முடிந்த கடைசி மூன்று நிமிட மேகிங் வீடியோவையும் பார்க்கத் தவறாதீர்கள்! சிம்ரனின் வருகை… கில்லியின் த்ரிஷா காரப்பொரி வசனம் என இன்னும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சியைக் கொடுக்கும் எக்கச்சக்கமான மசாலா படம் முழுக்க இருக்கிறது.
நண்பர் தமிழ் ஸ்டுடியோ Arun Mo அருண் மோவின் நட்புக்குள் பிறகு, பியூர் சினிமாவின் சில நூல்களைப் படித்த பின்பு திரைப்படங்களின் கலரிங் சார்ந்த ஆர்வமும் இருப்பதுண்டு.. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படங்களுக்கு உரித்தான நிறத்தையும் கூர்மையாக கவனிக்க வேண்டி இருந்தது… கலர்புல்!
கொண்டாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொண்ட திரையரங்கம், திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது, ஒவ்வொருவரின் முகத்திலும் அவ்வளவு கிளர்ச்சி! படத்தில் இடம்பெற்ற காட்சிகளைப் பற்றி ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே கூச்சலிட்டுக் கொண்டே விடைபெற்றதைப் பார்த்த போது, முப்பது வருடங்களுக்கு முன்னால் மீண்டும் சிறுவனாகச் சேலம் திரையரங்குகளில் துள்ளிக் குதித்ததைப் போன்றதொரு பீலிங் எனக்கு! நாஸ்டால்ஜிக்!
ஒரு மருத்துவர் தானே… திரைப்படங்களைப் பற்றி பேசலாமா… என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! திரைப்படங்களைப் பற்றி பேச பிரிவு இருக்கிறதா என்ன… இப்போது இருக்கும் சூழலில்… இறுக்கமான வாழ்க்கை முறையில் கொண்டாட்டங்கள் தான் குதூகலத்தையும், மகிழ்ச்சியையும் குழைத்துக்கொடுக்கும். இப்படியான சூழலைத் தான் திருவிழாக்களும் நமக்குக் கொடுத்திருக்கின்றன!
உண்மையில் கொண்டாட்டங்களும் ஒரு மருந்து தான்! அது தனக்கும் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமையும் வரை கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட வேண்டும்!… உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய சின்ன சின்ன விஷயங்களைத் தேடிப் படித்து கொண்டாடுங்கள்! அக்லியாக இருக்கும் உங்கள் வாழ்க்கை, குட்டாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
லாஜிக்… அது இது எது… என யோசிக்காமல் கொண்டாட்ட மனநிலையோடு 2:20 நிமிடங்கள் கொஞ்சம் ஜாலியாக இளைப்பாரலாம்..
குட்… பேட்… அக்லி… உண்மையில் குட்!…
– மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)