”குட் பேட் அக்லி” படத்தின் மூலம் 2கே கிட்ஸ் மத்தியிலும் பிரபலமடைந்துள்ள “சுல்தானா சுல்தானா” பாடல் 1999-ல் வெளிவந்த “எதிரும் புதிரும்” படத்தில் இடம் பெற்றது. இயக்குனர் தரணியின் முதல் படமான எதிரும் புதிரும், வீரப்பன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுத்த படம். அந்தப் படத்தில் தரணியின் பெயர் “ரமணி” என்றே வரும். மம்முட்டி, நெப்போலியன், சங்கீதா, மனோரமா நடித்த படம் ஆக்ஷன் படமாகவும் இல்லாமல், பேமிலி படமாகவும் இல்லாமல் இடைப்பட்டு மாட்டிக் கொண்டதில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் படம் தாமதமானதாக நினைவு.
தரணி + வித்யாசாகரின் கூட்டணி ஆரம்பித்த படம். அதன் பிறகு இருவரும் சேர்ந்த பொழுதெல்லாம் எல்லாமே சூப்பர் ஹிட் தான். தில், தூள், கில்லி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார்கள்.
“எதிரும் புதிரும்” ஆல்பத்தில் 5 பாடல்கள் இருந்தாலும், படத்தில் 2 பாடல்கள் தான் இடம்பெற்றது. இடம் பெறாமல் போன 2 பாடல்களும் டூயட் பாடல்கள். ஹரிஹரன் சுவர்ணலதா பாடிய “நிலவொண்ணு பத்திகிச்சு” பாடலை பெரிதாக யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. சுஜாதா மோகன், மலேசியா வாசுதேவன் பாடிய “மருதாணி தொட்டு” பாடல் எனக்கும்கேட்ட நினைவே இல்லை.
படத்தில் இடம் பெற்ற 2 பாடல்களில் ஒன்று “காத்து பொசபொசங்க” பாடல் அக்மார்க் கிராமியப் பாடல். அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி பாடிய இந்தப் பாடல் டவுன்பஸ்களிலும், கிராமத் திருவிழாக்களிலும் தவறாமல் இடம்பிடிக்கும் பாடல். கல்யாண் மாஸ்டரும், ஓ போடு புகழ் ராணியும் இணைந்து ஆடிய பாடல்.
கடைசியாக வரும் பாடல் தான் “சுல்தானா சுல்தானா”. இந்தப் பாடலின் பெண்குரல் சுவர்ணலதா என்பது அனைவருக்கும் தெரியும். பாடலில் உடன் ஆடிய ராஜுசுந்தரத்தை யாரும் கண்டு கொள்ளாத மாதிரி பாடலைப் பாடிய ஆண்குரலையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்தப் பாடலைப் பாடியதும் புஷ்பவனம் குப்புசாமி தான். வித்யாசாகர் இவருக்கு தொடர்ச்சியாக தன் படங்களில் வாய்ப்பு வழங்கினார். இவருக்கு மட்டுமல்ல கிராமியக் கலைஞர்கள் பலருக்கும் தொடர் வாய்ப்புகளை வழங்கியவர் வித்யாசாகர். பறவை முனியம்மா ஒரு உதாரணம்.
சுல்தானா பாடலும், சிம்ரனின் நடனமும் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. டாப் ஹீரோயினாக இருந்தாலும் ஒரு பாடலுக்கு ஆடுவதில் சிம்ரன் தயங்கியதே இல்லை. அந்தப்புரம் படத்தில் ” மானாமதுர மல்லிகப்பூ” பாடலில் ஆடினார். “யூத்” படத்தில் “ஆல் தோட்ட பூபதி” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
சுல்தானா பாடலுக்குப் பிறகு சிம்ரன், ராஜு சுந்தரம் இடையே நெருக்கம் என கிசுகிசு பலமாக பேசப்பட்டது. அண்ணனுக்கு சிம்ரன், தம்பிக்கு நயந்தாரா. கிசுகிசுவை சொன்னேன்பா..
வித்யாசாகரின் அட்டகாச இசையிலும், சிம்ரன், ராஜு சுந்தரத்தின் நடனத்திலும், சுவர்ணலதா, புஷ்பவனம் டைனமிக் குரலிலும், சிம்ரனின் கவர்ச்சியிலும் பாடல் அதிரிபுதிரி ஹிட் ஆனது..
25 வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை ஹிட் ஆகியிருக்கிறது..!
– மகாதேவன் சி