“மாநகரம்” நடிகர் ஸ்ரீ-க்கு என்ன ஆச்சு? என்ற கேள்விதான் சமீப காலமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.
அதாவது நடிகர் ஸ்ரீ, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், உடல் மெலிந்த தோற்றத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக மாறிப் போன நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனைப் பார்த்து கடும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விகாரம், தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒட்டுமொத்தமாக பேசும் பொருளாக மாறியது.
இதனையடுத்து, “நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி, அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பதாகவும்” அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தான் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான ராஜசங்கீதன், நடிகர் சங்கம் பற்றி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இது குறித்து விமர்சித்துள்ள எழுத்தாளர் ராஜசங்கீதன், “முக்கியமான படங்களில் நடித்து பெயர் பெற்ற ஒரு நடிகர், சிரமதசையில் இருப்பதாக பதிவிடுகிறார். அவரின் நிலை கண்டு குடும்பத்தினர் பதைபதைக்கின்றனர். நண்பர்கள் உதவ ஓடுகின்றனர். சாமானியர்கள் கூட பதறிப்போய் பின்னூட்டம் இடுகின்றனர். ஊடகங்கள் நடிகரை குறித்து விசாரணை நடத்துகின்றன. நடிகர் சங்கம் எங்கு போனது?
நடிகர் சங்கத் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
நடிகர்கள் பாதிப்படையும் நிலையில் முன் வந்து நடவடிக்கை எடுக்க முனையாத அமைப்புக்கு ஏன் நடிகர் சங்கம் என பெயர்?
சினிமா பஞ்சாயத்துகளை மட்டும் கவனிப்பதுதான் நடிகர் சங்கத்தின் வேலையா?
உறுப்பினர்கள் சார்ந்த சிக்கல்களுக்கு முகம் கொடுக்காமல் எதற்கு ஒரு சங்கம்?
கட்டடம் கட்டுவதற்கென மட்டுமே ஒரு சங்கம் இயங்குவதால் யாருக்கென்ன பயன்?
நடிகர் ஸ்ரீயின் நிலைக்கு திரையுலகம் செவிமடுக்க வேண்டும். நடிகர் சங்கம், அவர் மீளுவதற்கு உதவ வேண்டும்.
சமூகக் குழுக்கள் செயல்படவில்லை எனில், சமூக மனிதர்கள் தங்களின் ஓர்மையை இழப்பார்கள்.” என்று, ராஜசங்கீதன் மிக கடுமையாக நடிகர் சங்கத்தை விமர்சித்து உள்ளார்.