பெண் ஒருவரை, ஒரு சங்கத்தின் தலைவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், “நான் அந்த மாதிரி பெண் கிடையாது” என்று, சத்தம் போட்டு பெண் கூச்சல் எழுப்பி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சங்க தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
“மள்ளர் மீட்பு கழகத்தின்” நிறுவனத் தலைவர் செந்தில் மள்ளர் தான், பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த 47 வயதான செந்தில் மள்ளர், “மள்ளர் மீட்பு கழகத்தின்” நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார்.
“மள்ளர் மீட்பு கழகத்தின்” நிறுவனத் தலைவர் செந்தில் மள்ளர் மீது சென்னை நுங்கம்பாக்கம், திருநெல்வேலி, கோவில்பட்டி, சங்கரன் கோவில், திருவேங்கடம், தஞ்சாவூர், கழுகுமலை, சாத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர், “என்னிடம் செந்தில் மள்ளர், தவறாக நடக்க முயன்றதாக” கூறி, பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
அதன்படி, கடந்த மார்ச் 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்து உள்ளார். இந்த புகாரில், “நான் கூலி வேலை பார்த்து வருகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். நான், எனது தங்கை மற்றும் அவரது மகளுடன் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறேன்.
எனது கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே, இறந்து விட்டார். எனது கணவர் இல்லாததால், “மள்ளர் மீட்பு கழகத்தின்” நிறுவனத் தலைவர் செந்தில் மள்ளர், கடந்த சில மாதங்களாக அடிக்கடி என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் வகையில், பேசி வந்தார்.
ஆனால், நான் அந்த மாதிரி பெண் கிடையாது என்று, பல முற சத்தம் போட்டு கூறிவிட்டேன். ஆனால், அதை எனது தங்கையிடம் சொல்லி விட்டேன். அவர், இதனை பெரிது படுத்த வேண்டாம் என சொன்னதால், நானுமு் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்து விட்டேன். இது குறித்து புகார் எதுவும் கொடுக்கவில்லை.
ஆனால், தொடர்ந்து, அதாவது கடந்த மார்ச் 26 ஆம் தேதி, வழக்கம் போல் நான் வீட்டின் முன்பக்க அறையிலும், எனது தங்கை மற்றும் குழந்தைகள் வீட்டின் வலது புறம் உள்ள படுக்கையறையிலும் தூங்கிக் கொண்டிருந்தோம்.
அப்போது, வெயில் காரணமாக வீட்டில் உஷ்ணம் அதிகமாக இருந்ததால், காற்றுக்காக நாங்கள் வீட்டின் முன்பக்க கதவை லேசாகத் திறந்து வைத்து விட்டு, தூங்கிக் கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த செந்தில் மள்ளர், எனது வீட்டினுள் அத்து மீறி நுழைந்து, நான் தனிமையில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, என்னிடம் அவர் தனிமையில் இருக்க வேண்டும் என்ற, ஆசையில் ஆபாச சைகைகளை காட்டி என்னை நெருங்கி வந்தார். உடனடியாக, நான் அவரை தள்ளி விட்டு விட்டு சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டேன்…
இதனால், செந்தில் மள்ளர் என்னை பார்த்து அசிங்கமாக பேசிவிட்டு, இதைப் பற்றி நீங்கள் யாரிடமாவது வெளியே சொல்லி என்னை கேவலப்படுத்தனும்னு நினைச்சீங்கன்னா, உங்க 4 பேரையும் வெட்டி கொன்று விடுவேன் என்று, மிரட்டினார்.
மேலும், நான் போலீசுக்கு பயந்த ஆளு கிடையாது. ஏற்கனவே, ரவுடியாகத் தான் இருந்தேன் என எங்களை அவர் மிரட்டினார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் சத்தம் போடவும், அவர் வாக்கு வாதமும் கைகலப்பும் ஏற்பட்டதையடுத்து, செந்தில் மள்ளர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அதன் பிறகு, இரவு நேரம் என்பதால் வீட்டிலேயே இருந்து விட்டு, அடுத்த நாள் காலை விடிந்ததும் கழுகுமலை காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் கொடுத்தேன்” என்று, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்து உள்ளார்.
இந்த புகாரின் பேரில், கழுகுமலை இன்ஸ்பெக்டர் பத்மாவதி, “மள்ளர் மீட்பு கழகத்தின்” நிறுவனத் தலைவர் செந்தில் மள்ளரை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு, செந்தில் மள்ளர் மீது கிட்டதட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவின் பேரில், பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்ட “மள்ளர் மீட்பு கழகத்தின்” நிறுவனத் தலைவருமான செந்தில் மள்ளரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.