வீட்டின் பூட்டை உடைக்காமலேயே 58 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு, 20 நாட்களாக காத்திருந்து காத்திருந்து என்ன நடக்கிறது என்று வேவு பார்த்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது…
வீட்டின் பூட்டை உடைக்காமல் 58 பவுன் நகைகள் கொள்ளை. 20 நாட்களாக கொள்ளை சம்பவம் தெரிய வருகிறதா என நகையுடன் கண்காணித்த நபர்.
தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் வளர்மதி, அங்கள்ள அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் பாலசுப்பிரமணியம், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நிலையில், இந்த தம்பதியினரின் மகன்களும் வெளியூரில் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் தான், கடந்த 31 ஆம் தேதி, அவர் வீட்டு நிலத்தின் பத்திரப்பதிவுக்காக, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைப்பதற்கு பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றனர்.
அப்போது, நகைப் பெட்டியில் நகைகள் இல்லாததை கண்டு அந்த பெண் வளர்மதி, கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால், பதறிப்போன வளர்மதி, இது குறித்து தனது கணவரிடம் போனில் விசயத்தை கூறி உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, வீட்டின் பூட்டு உடைக்காமல், பீரோ கதவுகள் உடைக்காமல், பீரோவில் உள்ள துணிகள் எதுவும் கலையாமல், நகைகள் மட்டும் திருடு போயிருப்பதைக் கண்டு, யார் மீது சந்தேகப்படுவது என்று தெரியாமல், இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அத்துடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் திட்டை பகுதியை சேர்ந்த 39 வயதான சுதாகர் என்பவரை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக சுதாகரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுதாகர் வளர்மதிக்கு உறவினர் என்பது தெரிய வந்தது.
அத்துடன், “வளர்மதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதும், பள்ளிக்கு செல்லும் போது, அவர் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வெளி பகுதியில் வைத்துவிட்டு செல்வதையும், உறவினரான சுதாகர், நன்றாக அறிந்து வைத்துக்கொண்டு இருந்து உள்ளார்.
இப்படியாக, ஒரு வார காலமாக வீட்டை சுதாகர் நோட்டமிட்டு உள்ளார். இதனை அடுத்து, மார்ச் 10 ஆம் தேதி பகல் வேளையில், சாவியை எடுத்து வீட்டிலிருந்து நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, பின்னர் வீட்டை மீண்டும் பூட்டி விட்டு, சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு, அங்கிருந்து அமைதியாக சென்றிருக்கிறார்.
குறிப்பாக, இந்த திருட்டு சம்பவம் குறித்து, வளர்மதிக்கு தெரிகிறதா? என்றும், அவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, நகைகளை வீட்டில் வைத்து வளர்மதியை கண்காணித்து வந்து உள்ளார் என்பதும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதனைடுத்து, சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சுதாகரை கைது செய்து, அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 58 பவுன் நகைகளையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.