“Contact” என ஒரு படம்!
ஓர் இளம் அறிவியலாளருக்கு நேர்மையாக கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை தட்டிப் பறித்து, அவரை பற்றி பொய்த் தகவல் பரப்பி, தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும் ஒரு மூத்த அறிவியலாளரிடம் அந்த இளம் அறிவியலாளர் ‘இது நியாயமா’ எனக் கேட்கும் ஒரு காட்சி அப்படத்தில் உண்டு.
அதற்கு அந்த மூத்த அறிவியலாளர் இப்படி சொல்வார்:
“இவை யாவும் அநியாயம் என நீ நினைக்கலாம். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நியாயம் என்பதை மட்டுமே அளவுகோலாக கொண்டு இயங்கும் உலகமாகவும் நீ வெளிப்படுத்தியதை போன்ற அறவுணர்வுக்கு மதிப்பளிக்கும் உலகமாகவும் இந்த உலகம் இருக்க வேண்டுமென எனக்கும் தான் ஆசை இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு உலகில் நாம் வாழவில்லை.”
நடிகர் ஸ்ரீ இருக்கும் நிலைக்கு காரணமாக எதுவும் இருக்கலாம். ஆனால், அது அவருக்கு நேர்ந்திருக்க வேண்டிய எந்த நியாயமும் இருக்க முடியாது என்பதில் நம் அனைவருக்கும் உடன்பாடு இருக்கும். ஏனெனில், அத்தகைய உடன்பாடை தான் நாம் மனித நேயம் என்கிறோம்.
அரசியல், பதவிவெறி, பணம், புகழ், வஞ்சம், அகம்பாவம், தனி மனிதவாதம் போன்ற பல காரணங்களுக்காக எத்தகைய கரணமும் அடிக்கத் தயாராக இருக்கும் மனிதர்களாக நாம் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீக்கு நேர்ந்ததை போன்ற சூழலை கூட, பரிவற்று பேசும் நிலை என்பது நிச்சயமாக சமூகத்துக்கு ஒவ்வாத நிலை.
இன்றைய நவதாராள சமூகம், பல ஒற்றை மனிதர்களை உருவாக்கி இருக்கிறது. காரணம் இருந்தால் மட்டுமே, மனிதர்களிடம் பேசுகிறோம். இதற்கு அடிப்படையான காரணம், வேகமாக விரைந்தோடி முன்னேற வேண்டிய கட்டாயத்தைக் கொண்டு இயங்கும் மனிதர்கள், பிற மனிதர்களுக்கு நேரம் வழங்குவதில்லை. எனவே, அந்த பிற மனிதர்கள், சக மனிதர்களை நாடுவதில்லை. இதை, நம் கைகளுக்குள் இருக்கும் தொழில்நுட்பங்கள் எளிமை ஆக்குகிறது.
கூட்டங்களாக வாழ்ந்ததால் பரிணமித்தவன் தான் மனிதன். அவன் தனி வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் போது, பரிணாமத்தில் பின்னேறுகிறான். சிதைவு கொள்கிறான். தன்னை அழிக்கிறான். நவதாராளவாதத்தை அளவு கடந்து ஏற்ற நாடான ஜப்பானில் தனிமையில் புதைந்து கொள்பவர்கள் நிறைய உண்டு. மணம், காதல் போன்ற உறவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அங்கு குறைந்து வருகிறது. தற்கொலைகளும் அதிகம். ஒற்றை மனிதர்களும் அதிகம்.
பணத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்கும் வாழ்க்கை முறையின் கனத்தை மனித மனங்கள் தாங்க முடிவதில்லை. அந்த உண்மையின் குரூரம், சுரண்டலாக வெளிப்படும் அதே நேரத்தில், அதன் பரிதவிப்பு தன்னழிப்பாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நியாயங்களற்ற சமூகத்தில், நியாயங்களுடன் வாழ்வது பலவீனம் அல்ல, பலம் என்பது பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒற்றை மனிதனாக்கி உலகம் ஒடுக்கினாலும் ஓர்மையில் உறுதி கொள்ளல் வேண்டும்.
இயற்கை நீதியாக மனிதப் பரிணாமம், மனித வாழ்வுக்கான நியாயத்தை வழங்குகையில், செயற்கை நீதியைக் கொண்டு ஒடுக்க முனையும் ஆதிக்கத்துக்கு ஏன் அடிபணிய வேண்டும்?
வாய்ப்பை தட்டிப் பறித்த மூத்த அறிவியலாளரின் வியாக்கியானத்துக்கு, இளம் அறிவியலாளர் இப்படி பதில் சொல்வார்:
“வேடிக்கை என்னவென்றால், நாம் எந்த வகையில் விரும்புகிறோமோ அந்த வகையில் தான் உலகமும் உருவாகும் இல்லையா!”
ஏன் நியாயமான உலகம் உருவாகவில்லை என்பது தான் கேள்வி.
– ராஜசங்கீதன்