Mon. Jun 30th, 2025

‘ஹிந்தி’ விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி சரமாரி கேள்வி..

‘மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிரொலித்த ஹிந்தி’ விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

‘மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிந்தி படிப்பது கட்டாயமில்லை’ என்று, அம்மாநில முதல்வர் கூறியிருப்பதை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை முன் வைத்து உள்ளார். அந்த கேள்விகளும், அதற்கு என் பதிலும் இது தான் என்று, பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்து உள்ளார்.

அதன்படி,

– “மஹாராஷ்டிராவில் மராத்தி மொழி மட்டுமே கட்டாயம் என்பதையும் மற்ற எந்த மொழியும் கட்டாயமில்லை என்கிற முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் அவர்களின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கிறதா? அப்படியானால், தேசிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழி கட்டாயமில்லை என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்துமா?

– கண்டிப்பாக ஏற்கும். மராத்தி மொழி மட்டுமே கட்டாயம், ஆனால், ஹிந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி போன்ற ஏதாவது ஒரு இந்திய மொழியை தங்களின் விருப்பத்திற்கேற்ப கற்கலாம் என்பதையே கூறியிருக்கிறார். தேசிய கல்வி கொள்கையின் படி ஹிந்தி கட்டயாமில்லை என்பதையே அவர் தெளிவுபடுத்தி உள்ளார். மூன்றாவது மொழி கட்டாயமில்லை என்று, அவர் கூறவேயில்லை.

– ஆகையால், மூன்றாவது மொழி கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2152 கோடி ரூபாயை உடனடியாக மாநில அரசுக்கு அளிக்குமா மத்திய அரசு?

– பல்வேறு திட்டங்களில் மத்திய கல்வி துறை மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குகிறது. PMSHRI திட்டத்த்தை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டு விட்டு பின்னர் முடியாது என்று மறுத்தது நீங்கள் தானே? அதே போல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (SSA) குறிப்பிட்ட ICT திட்டத்தில், அதாவது நடுநிலை பள்ளிகளில் கணினி பயிற்சி கூடங்கள் அமைப்பது மற்றும் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது தவறு தானே? அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கணினி பாடம் மறுக்கப்படுவது அநீதியில்லையா? ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதாக கூறி விட்டு, வேறு எதற்கோ பயன்படுத்துவது முறைகேடல்லவா? நீங்கள் செய்த தவறை மறைப்பதற்கு மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்து உள்ளது என்று குற்றம் சாட்டுவது தவறல்லவா?

– முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே, மஹாராஷ்டிர முதல்வர் கூறியதை தெளிவுபடுத்தி விட்டேன். அவர், சொன்னதை நீங்கள் ஏற்றுக் கொண்டு தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த தயாரா?

– அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மறுக்கப்பட்ட கணினி பாடத்தை அளிக்க தயாரா?” என்று, நாராயணன் திருப்பதி, தமிழக முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *