தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றால் அத்துறையை கையாளும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எதிர்கட்சிகள் வரிசையில் இருந்து அடிக்கடி எழுவதை நாம் கேட்டுள்ளோம்.
1956-ல் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் அரியலூர் அருகே விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வேத் துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது வரலாறு. இதனை உதாரணமாகக் காட்டித்தான் தற்போது வரை ராஜினாமா குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் எந்தவொரு அமைச்சரும் தனது பதவியை தூக்கியெறிந்ததாக தெரியவில்லை.
இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பொதுமக்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இந்த கொடூரத்திற்கு The Resistance Front என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், நம்பிக்கையையும் தர பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடியவர்கள் யார்?..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் ஆகிறது. அதற்கு முன்னர் 6 ஆண்டுகளுக்கு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அதாவது மத்திய அரசு நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி நடத்தியது. இந்த காலகட்டத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்ததாகவும், தொழில்துறை – சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் புல்வாமா, யூரி, பதான்கோட்.. இப்போது பஹல்காம் என பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இதற்கு உண்மையில் யார் பொறுப்பேற்பது?- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய இருவர் தான் நேரடியாக இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். அதனால் தான் தாக்குதல் நடைபெற்ற உடனேயே அமித் ஷா அங்கு விரைந்துள்ளார்.
வேறு எந்த தாக்குதலை விடவும், பஹல்காம் தாக்குதல் மிகுந்த கவலையைத் தருகிறது. காரணம், இந்தமுறை மதத்தின் பெயரால், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு தோல்வியாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக அணுக வேண்டிய தேவை உள்ளது.
நவீன ஜேம்ஸ்பாண்ட் என்று புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரமிது. மணிப்பூர் கலவரத்தை அடக்குவதிலும் அவர் தோல்வி அடைந்து விட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அங்கு தோல்வியை அடைந்து விட்டார். இதோ பஹல்காம் படுகொலைகளுக்கும் இவர்கள் தான் பொறுப்பாளிகள்.
கணவனை இழந்த மனைவிகளின் கதறல்கள், தந்தையை இழந்த பிள்ளைகளின் கூக்குரல்கள், மகன்களை இழந்த பெற்றோர்களின் ரணங்கள் ஆகியவற்றுக்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். அது சட்டத்தின் பாதையில் இருக்க வேண்டும்.
“இந்துக்கள் என்பதால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், சுட்டவர்கள் இஸ்லாமியர்கள்” என்பதாகவே வெகுஜன பார்வையில் இந்த சம்பவம் பதிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சுட்டவர்கள் பயங்கரவாதிகள், அப்பாவி இஸ்லாமியர்களை இதற்கு பலிகடா ஆக்காமல் சரியான பாதையில் இந்த விவகாரத்தை அணுகவேண்டிய பெரும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது.
பஹல்காம் படுகொலைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலகுவாரா?.. குறைந்தபட்சம் அஜித் தோவலாவது வீட்டுக்கு அனுப்பப்படுவாரா?..
– க.அரவிந்த்குமார்