Mon. Jun 30th, 2025

மனைவி மீது சந்தேகம்.. மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்..!

மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுக்கோட்டை வடவாளம் அடுத்து உள்ள கீழ காயாம்பட்டியை சேர்ந்த 35 வயதான வீரமுத்து, இவரது மனைவி 28 வயதான ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 9 வயது, 6 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

வீரமுத்துவும் ராஜேஸ்வரியும் கட்டடப் பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் தான், கணவன் வீரமுத்து, அவரது மனைவி ராஜேஸ்வரி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு உள்ளார்.

இந்த நிலையில், கணவன் வீரமுத்துவுக்கும், அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே வழக்கம் போல், மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது, வீரமுத்து அருவாளை எடுத்து, ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளார். பின்னர், அவரும் அவரது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர், வீரமுத்துவின் தாயார் லட்சுமி, தன் வீட்டில் இருந்த பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீரமுத்துவின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது, வீரமுத்துவின் மனைவி ராஜேஸ்வரி, கழுத்தில் வெட்டு காயங்களுடன் சடலமாகவும், அதற்கு அருகிலேயே வீரமுத்து தூக்கில் தொங்கியபடி சடலமாகவும் கிடந்து உள்ளனர்.

இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த வீரமுத்துவின் தாயார் லட்சுமி மற்றும் வீரமுத்துவின் 3 குழந்தைகளும், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனையடுத்து, அருகே உள்ள வீட்டினரின் உதவியுடன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி விடுதி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் சடலத்தையும், தற்கொலை செய்து கொண்ட வீரமுத்துவின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்குள் இருக்கும் குடும்ப தகராரே காரணம் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மனைவி மீது சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு பிறந்த 3 குழந்தைகளும் தற்பொழுது தாயையும் – தந்தையையும் இழந்து நிற்கதியாய் நிற்பது பார்ப்பவர்களை வேதனடைய செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *