Mon. Jun 30th, 2025

கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் மிகுந்த பயத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று கருச்சிதைவு (Miscarriage). ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையில் புதிய அத்தியாமாய் தாய்மையை அனுபவிக்க தயாராகும் பெண்களுக்கு இந்த வார்த்தையை கேட்கும்போதே ஒரு மாதிரியான பயம் ஏற்படும்.

கருச்சிதைவு என்பது கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்கள் அல்லது மாதங்களில் திடீரென நிகழும் பொதுவான மற்றும் மோசமான ஒரு நிகழ்வு. ஏனென்றால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதம் வரை கருவானது நிலையானதாக இருக்காது; சில சமயங்களில் தானாகவே கலையும் வாய்ப்பும் அதிகம்.

இதனால் தான், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மூன்று அல்லது ஐந்து மாதங்கள் கழித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். இப்படி கரு தானாகவே கலைந்து போவதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

கரு சிதைவுக்கான காரணங்கள் என்ன?

கருச்சிதைவு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இதன் காரணம் அறியமுடியாததாக உள்ளது. இருப்பினும், கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவிற்கான பொதுவான காரணம், குரோமோசோம் பிறட்சிகள், அதாவது குழந்தையின் குரோமோசோமில் ஏதாவது தவறு நிகழ்வது. இந்த அசாதாரண மாற்றங்கள் பரம்பரை ரீதியாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஏற்படலாம். இது எல்லோருக்கும் உண்டாகாது என்றாலும், குடும்ப வழியில் உள்ள பெண்களுக்கு அதிகம் உண்டாகிறது.

சில சமயங்களில், கருப்பை அல்லது கருப்பை வாயில் ஏற்படும் தொற்றுகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும். அதேபோல், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கருச்சிதைவு அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, தைராய்டு நோய்கள், கருப்பை கோளாறுகள், இதய நோய் மற்றும் கடுமையான சிறுநீரக நோய்கள் ஆகியவையும் கருச்சிதைவை ஏற்படுத்தும். குறிப்பாக, திடீரென ஏற்படக்கூடிய சில அதிர்ச்சியும் சில பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனென்றால், வயது அதிகமாக குரோமோசோம்களில் அதிகளவில் மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவு கருச்சிதைவை ஏற்படுத்துகிறது. பொதுவாக, அதிகமாக புகைப்பிடிக்கும், குடிப்பழக்கம் உள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம். சில சமயங்களில் அதிக எடை மற்றும் குறைவான எடையும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.

இதுதவிர, லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் மின்காந்த அலைகள் அதிகளவு ஆக்ஸினேற்ற அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது. இது கர்ப்பிணி பெண்களின் திசு மற்றும் செல் சேதத்திற்கு ஆளாக்குகிறது. இதனாலும் கருச்சிதை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *