Uyyangondan Book Launch Event | திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ரெட்ஃபாக்ஸ் ஹோட்டல் வளாகத்தில் இன்று (22 ஜூன் 2025) காலை 09.00 மணியளவில் தொழிலதிபரும், எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளரும், கட்டுமான பொறியருமான முனைவர் அர.க.விக்ரம கர்ண பழுவேட்டரையர் எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க “உய்யங்கொண்டான்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் அசோகன் வரவேற்பு உரை ஆற்றினார். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலர் மற்றும் உறுப்பினர் வேல்முருகன், நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துக் கொண்டு நூலை வெளியிட்டனர். பிரணவ் கேஸ்ட்ரோ சென்டர் நிர்வாக இயக்குநர் துரை சசி ஆனந்த், சிங்கப்பூர் அரசு தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு கழக முனைவர் சந்தன்ராஜ், சில்வர் லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் நடுவே பத்திரிக்கையாளர் அருள் வளன் அரசு, ஜெனிபர், திருமாந்தர் ப்ரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு எங்க போய்ட்டான் பற்றி சிறப்புரையாற்றியனர். இத்துடன் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் முரளி, மீன்வளத்துறை முன்னாள் செயலாளர் தண்டபாணி, ஆல்ஃபா மைன்ஸ் வென்ச்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் இளமயிலன், பெரம்பலூர் முன்னாள் மருத்துவ இணை இயக்குநர் திலகவதி கணேசபாபு, மத்திய மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். நூலாசிரியர் முனைவர் அர.க.விக்ரம கர்ண பழுவேட்டரையர் ஏற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில், வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் இளவரசி விக்ரம் கர்ணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.
உய்யங்கொண்டான் நூலின் சிறப்பு:
இந்த நூலின் மூலமாக காலத்தால் காணாமல் போன களப்பிரர்களுக்கு பிறகு மீண்டெழுந்த சோழம், உறையூர் சோழர்களுக்கு பிறகு வரலாற்றில் இறுதி காலச் சோழர்கள் எனப்படும் பழையரை சோழ சாம்ராஜ்யம் எங்கிருந்து தொடங்கியது? அடுத்த 400 ஆண்டுகளுக்கு சோழர்களின் ஆட்சி நீள்வதற்கு வித்திட்ட அந்த பிதாமகன்கள் யார் யார்? பழுவேட்டரையர்களுக்கும், சோழர்களுக்குமான நட்பு எப்படி இருந்தது? என அனைத்தையும் படித்து அறிந்து புரிந்து கொள்ளலாம்.