யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில், “நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை?” என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதில், வழக்கமான நடைமுறைப்படி சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்கில் தீர்வு காணும் வகையில் மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வழக்கை பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து, சவுக்கு சங்கர் தாயார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று, கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலாஜி தீர்ப்பளித்து 15 நாட்கள் கடந்த நிலையில், ஏன் அரசு சார்பில் இன்னும் பதிலளிக்கவில்லை? தற்போது மீண்டும் அவகாசம் ஏன் கேட்கப்படுகிறீர்கள்?” என்று, கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஒரு வழக்கில் குற்ற முகாந்திரம் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். தனிமனிதர் மீதான வழக்காக இருந்தாலும் கவனம் செலுத்துவதில் தவறில்லை” என்று கூறி, இந்த வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.