“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இது வரை வருந்தவில்லை என்றும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்” என்றும், சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், “மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என்றும், வாதிட்டார்.
இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி, மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்றும், அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை” என்ற கருத்தை முன் வைத்தார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், மனுதாரருக்கு இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை” என்றும், ஆட்சேபம் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும், நடந்த சம்பவத்திற்கு இது வரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை என்றும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்” என்று பேசிய நீதிபதிகள், “துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப்பேற்பார்க்ள்?” என்றும் காட்டமாகவே கேள்வி எழுப்பினர்.
மேலும், எதிர்மனுதாரர்களின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்கும்படி மனுதாரர் ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.