“நான் முதல்வன் திட்டம் மூலம் ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 7ஆயிரத்து 500ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது: நம் குழந்தைகள் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது” என முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேச்சு.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
உலகில் எந்த நாட்டில் குழந்தைகள் மதிக்கப்படுகிறதோ அந்த நாடு தான் சிறந்த நாடு. குழந்தைகளை நேசிப்பதுடன், அவர்களை மதித்து ஆர்வத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும். கல்விதான் உலகின் சிறந்த ஆயுதம் அதனைக் கொண்டு குழந்தைகள் எங்கு வேண்டும் என்றாலும் சண்டை போடுவார்கள். இதுதான் நமக்கு மிகப்பெரிய சொத்து. எந்த நாடு நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதோ, அந்த நாட்டிற்கே பிரதம மந்திரியாக நம் குழந்தைகள் ஆகியுள்ளனர். நம் குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் கல்வி மூலம் சிறந்த வேலைவாய்ப்பு பெற்று வருவார்கள்.
இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்றால் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் படியுங்கள். தற்போது ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்நாடு அகாடமியில் தங்கி பயிலவும் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் நம் குழந்தைகள் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்று, அவர் கூறிய திட்டங்கள் பல மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக நிகழ்ச்சியில் பேசினார்.