பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஆசைக்கு இணங்காததால் கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகி உள்ளது. என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்..
சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் 2 ஆம் ஆண்டு படித்து வரும் 26 வயது மாணவி ஒருவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் முகமது பைசல் என்பவர் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
அத்துடன், இதற்கு ஒத்துக் கொள்ளாததால், அசிங்கமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து, கானாத்தூர் போலீசார் பாலியல் துன்புறுத்தல், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் மற்றும் பெண்வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியை தனிமையில் இருக்க வற்புறுத்தி கட்டாயப்படுத்திய நிலையில் கல்லூரி நிர்வாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அது முதல், தொடர்ந்து அந்த மாணவிடம் பாலியல் அத்துமீறலிலும், ஆபாச சைகை காட்டுவது ஆபாசமாக பேசுவது என தொடர் தொல்லைகள் கொடுத்து வருவதாகவும், இதே போன்று மாணவர் முகமது பைசல் மேலும் சில மாணவிகளுக்கு தொல்லைக்கொடுத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்லூரி நிர்வாகத்தில் இதுவரை மூன்று மாணவிகள் புகார் அளித்து இருப்பதாகவும், அது தொடர்பாக வருகிற திங்கள் கிழமை அன்று கல்லூரி நிர்வாகத்தில் உள்ள கமிட்டி விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த பிறகே, காவல் நிலையத்திற்கு புகார் சென்றுள்ளது. இந்த புகார் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த புகார் குறித்த தகவல் அறிந்து மாணவர் முகமது பைசல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.