நடிகர் ராகவா லாரன்ஸ், அரக்கோணம் அருகே தையலக கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெரு மூச்சு பகுதியைச் சேர்ந்த இர்ஷாந் யாமினி தம்பதிகளின் மகளான நஸ்ரின். இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
ஐந்தாம் வகுப்பு மாணவியினா நஸ்ரின், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடல்கள் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவ லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவியின் பாட்டினை வெகுவாக ரசித்து பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அந்த மாணவியின் பெற்றோர்களை அழைத்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேசி உள்ளார். அப்போது, மாணவியின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவி நஸ்ரின் குடும்பத்தார் விருப்பத்தை ஏற்று, தையலகம் (டெய்லரிங் கடை) அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.
அதன் பேரில், ரூபாய் 1.75 லட்சம் செலவில் டைலரிங் கடை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன், நடிகர் ராகவா லாரன்ஸ் அந்தக் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
மேலும், நடிகர் ராகவ லாரன்ஸ் அரக்கோணம் பகுதியில் வருகை புரிந்ததை ஒட்டி, அவரைக் காண அதிகளவில் பொது மக்கள் அங்கு திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.