அதிமுக கூட்டணிக் கணக்கு பற்றி, தமிழக சட்டப் பேரவையில் சுவாரஸ்யமான உரையாடல்கள் நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவையில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக தொடந்து விவாதம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் தொண்டர்களின் எதிர் காலத்திற்கான கூட்டல் கழித்தலில் ஏமாறாமல் இருந்தால், அதற்கு தன் வாழ்த்துக்கள் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், இன்றும் அதன் தொடர்ச்சியாக விவாதம் நடைபெற்றது.
இன்றைய தினம் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “கணக்கு கேட்டு தொடங்கிய கட்சி தான் அதிமுக. 2026 -ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார்” என்று பேசினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “கணக்கு கேட்ட கட்சி ஆரம்பித்த நீங்கள் தற்போது தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று, பதில் அளித்தார்.
இதனையடுத்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும். கூட்டிக் கழித்து பார்த்தால் அவர் போடும் கணக்கு சரியாக வரும்” என்று, பேசினார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “கடந்த ஆட்சியின் போது, தாய் திட்டத்தை கைவிட்டதன் மூலம் தாயையே அதிமுக மறந்துவிட்டது” என்று, பேசினார்.
இதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “தாய் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. எங்களை எல்லாம் வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை, எந்நாளும் நாங்கள் மறக்க மாட்டோம்” என்று, பதில் அளித்து பேசினார்.
முன்னதாக, தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், “விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கரெண்ட் பட்டியல் உள்ளவர்கள் கரெண்ட் கிடைக்க தாமதம் ஆகிறது. விரைவாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கபடுமா?” என்று, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில், “2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்து. இதில் 1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்” என்றும், அவர் பதில் அளித்தார்.