பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரியாணி போடுவதில் ஏற்பட்ட தகராறு முன்விரோதமானதால், கிச்சைகாக அனுமதிக்கப்பட்ட ரவுடியை, அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்ற மற்றொரு ரவுடி கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரை சேர்ந்த ரவுடி பாலா என்ற பால நரேந்திரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்த சூழலில் தான் பாலா என்ற பால நரேந்திரனும், ஜோயல் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து உள்ளனர். இந்த சூழலில் தான் கடந்த 2 ஆம் தேதி முதல் ஜோயலின் குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் நடந்தது. அப்போது, மது போதையில் கேக்கை வெட்டி வீசியும், பிரியாணியை கீழே கொட்டியும் சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜோயலின் மனைவிக்கும் பாலாவின் தயாருக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது.
அதன் பிறகு, நேற்று ரவுடி பாலாவை, ஜோயல் கூட்டாளிகள் கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர். இதனையடுத்து, பாலாவை சிகிச்சைக்காக குடும்பத்தினர் சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவுடி பாலாவை கொலை செய்ய ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். அதிலும் சிலர் தப்பி ஓடி உள்ளனர். அதில், அயனாவரம் ரவுடி சிவசங்கர் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் தான் கொலை செய்ய வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, பேசின் பிரிட்ஜ் போலீசார் ரவுடி சிவசங்கரை அயனாவரம் காவல் நிலையத்திலும், ஆட்டோ ஓட்டுனர் அஜித் மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, ராயப்பேட்டை போலீசார் தப்பி ஓடிய ஜோயல் மற்றும் அவனது கூட்டாளிகளான உடுக்கை அருள், பாலாஜி, மதன், உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.