பாதாம் பருப்பை போலவே, இந்த பாதாம் பிசினும் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினிலிருந்து தான் இந்த பாதாம் பிசின் தயார் செய்யப்படுகிறது. இதற்கு வாசனை மற்றும் சுவை என்று எதுவும் கிடையாது. ஆனால், இதில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், புரதம் போன்ற நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான பண்புகள் நிறைய இருக்கின்றன. இதில் எந்தவிதமான இரசாயனங்களும் கிடையாது, முற்றிலும் இயற்கையானது. ஆயுர்வேத மருத்துவத்திலும் பாதாம் பிசின் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த பதிவில் பெண்கள் தினமும் பாதாம் பிசின் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
உடல் சூட்டை தணிக்கும்
சில பெண்களுக்கு எல்லா காலங்களிலும் உடல் சூடாக இருக்கும். இதனால், வயிற்று வலி, வயிறு எரிச்சல், வயிறு உப்புசம், வயிற்று புண், அசிடிட்டி போன்றவற்றை பிரச்சனைகளை அனுபவிப்பார்கள். அவர்கள் இந்த பாதாம் பிசினை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டை வெகுவாக குறைவதோடு, உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், சில பெண்கள் அடிக்கடி சளி, இருமல், ஜுரம் போன்ற பருவகால நோய்களை அனுபவிப்பார்கள். அவர்கள் தினமும் பாதாம் பிசனை சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கலாம். இதனால், பருவகால நோய்கள் அவ்வளவு சீக்கிரம் உங்களை நெருங்காது.
செரிமான பிரச்சனைகளை போக்கும்
தினமும் பாதாம் பிசினை சாப்பிட்டு வருவதால், வயிறு உப்புசம், வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம். மேலும், இதன் குளிரூட்டும் பண்புகள் குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பாதாம் பிசினில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள், சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது. சருமத்தை ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும் மற்றும் சரும சுருக்கங்களையும் குறைக்கும். அதேபோல், அதிகப்படியான முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
எலும்பு மற்றும் மூட்டுகளை பலப்படுத்தும்
எலும்பு மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகவும் முக்கியமானவை. இந்த சத்துக்கள் பாதாம் பிசினில் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, 30 வயதிற்கு பிறகு பெண்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகள் வரும். அதை தடுக்க தினமும் பாதாம் பிசினை சாப்பிட்டு வரலாம். இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், மூட்டு வலி மற்றும் முதுகுவலியை குறைக்கவும் உதவும்.
கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும்
கர்ப்பிணி பெண்கள் பாதாம் பிசினை உணவில் சேர்த்துக் கொள்வதால், வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதே வேளையில், பெண்களின் உடலையும் எலும்புகளையும் பலப்படுத்துவதால், பிரசவத்தின் போது தீவிர பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதுமட்டுமல்லாமல், பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்தவும் பாதாம் பிசின் உதவுகிறது.
குறிப்பு: எந்தவொரு உணவும் அளவுக்கு மீறினால் ஆபத்து தான். எனவே, தினமும் 1 ஸ்பூன் மட்டும் தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசனை சாப்பிடுங்கள். அதேபோல், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் தினமும் மருந்து உட்கொள்ளும் பெண்கள் பாதாம் பிசினை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.