உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், தான் புதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதாகவும், வீட்டு வேலைகள் எப்படியெல்லாம் நடைபெற்று வருகிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், நேற்று மாலை 6 மணி அளவில் பெரும்பூர் சடையப்பன் தெருவில் உள்ள வீடு அருகே வருகை தந்து உள்ளார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல், “அண்ணா..” என்று, பாச வலை விரித்து பேச்சு தொணியில் ஆம்ஸ்ட்ராங் அருகில் வந்து, அவரிடம் பேச்சுக்கொடுத்து உள்ளனர். அப்போது, அங்கு ஏற்கனவே வந்து நின்ற சிலர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் என மொத்தம் 8 பேர் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்து உள்ளனர்.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கூட இருந்த அவரது இரு நண்பர்களுக்கும், இதை தடுக்க முற்பட்ட நிலையில் அவர்களுக்கும் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, கொலை செய்த வேகத்தில் மர்ம நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக காயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 10 தனிப் படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், கொலை நடைபெற்ற அடுத்த 4 மணி நேரத்தில் கொலையில் ஈடுபட்டதாக 8 பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பெரம்பூர் பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ள நிலையில், போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.