ஆம், அரசியலில் நிறங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. கட்சிகளின் கொடிகளில் உள்ள நிறங்கள், சின்னங்களில் உள்ள நிறங்கள் போன்றவை தான் மக்கள் மனத்தில் முதலில் பதிகின்றன. அரசியலின் அரிச்சுவடி தெரியாதவர்களிடம் கூட கருப்பு – சிவப்பு என்றால் திமுக என்றும், அதில் வெள்ளைநிறத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் இருந்தால் அதிமுக என்றும் எளிதாக கூறிவிடுவார்கள். காவி என்றால் பாஜக என்பதும் அப்படியே..
அதிலும் கருப்பு நிறம், உலகம் முழுவதும் உள்ள அரசியல் இயக்கங்களின் ஆதார நிறமாகும். ஏனெனில் தங்களின் எதிர்ப்பினை தெரிவிக்க கருப்புச் சட்டை அணிவதும், கருப்பு பேட்ஜ் அணிவதும், கருப்பு பட்டையை கையில் அணிந்து வருவதும், கருப்பு பதாகையை ஏந்தி எதிர்ப்பை வெளிக்காட்டுவதும் உலகம் தழுவிய ஒரு எதிர்ப்பு அடையாளம். சமீபத்தில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நடைபெற்ற HANDS OFF போராட்டத்தில் அதிகம் பயன்படுத்தபட்ட நிறம் கருப்பு தான்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள், தங்கள் அதிருப்தியை எதிர்ப்பை தெரிவிக்க கருப்புச்சட்டை அணிந்து வருவது இயல்பான ஒன்றே. அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புச் சட்டை அணிந்தும் வருகின்றனர்.
நேற்றைய கூட்டத்தின்போது அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன் மட்டும் தனது கருப்பு பேட்ஜை கழற்றி வைத்துவிட்டு அவைக்கு வந்து தனது தொகுதி பிரச்னை குறித்து பேசிவிட்டு சென்றார். ஒட்டுமொத்த கட்சியும் ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது தான் மட்டும் தனியாவர்த்தனம் செய்வது என்பது அழகல்ல. எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்கிறாரா? அல்லது நான் அவர்களுடன் இல்லை என்று யாருக்கோ புரிய வைக்கிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.
நேற்றாவது கருப்பு பேட்ஜ். இன்றோ அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். ஆனால், நானும் அதிமுககாரன் தான் என்று கம்பு சுழற்றும் ஓபிஎஸ் வகையறா மட்டும் வெள்ளைநிற சட்டைகளை அணிந்தபடி வந்திருந்தனர். ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று இவர் விரும்பினால் மட்டும் போதுமா? இவரை கட்சித் தலைமை விரும்புகிறதா? இல்லையா? என்பது தெரியவேண்டாமா? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு எதிராக பலாப்பழச் சின்னத்தில் நின்றுவிட்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று இன்றளவும் கூவி வருவது எப்படி சாத்தியமாகும்?
இன்றைய இந்த கருப்பு – வெள்ளை நிற பேதமே கூறிவிட்டது. அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு என்ன நிலை என்று. செங்கோட்டையன் இளங்கருப்பில் சட்டை அணிந்து வந்தாரோ என்னவோ?…இல்லையென்றால் வெளியே போய்விட்டு மீண்டும் வெள்ளைச் சட்டை அணிந்து வருவாரோ என்னவோ?..
– க.அரவிந்த்குமார்