“பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்று, தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு உள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?” என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா எனவும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும், தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு பிளிடர் கார்த்திக் ஜெகநாத் ஆஜராகி, தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரிவிக்க மேலும் ஒரு காலம் அவகாசம் வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “பள்ளி – கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி – கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம் உள்ளது?” என்றும், கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, “பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்று உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்” என்றும், இறுதி கெடு விதித்து வழக்கின் விசாரணையை மார்ச் 6 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.