சென்னை ECR சாலையில் பெண்களை காரில் துரத்திய விவகாரம்: முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு என்ற இளைஞர் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ECR சாலையில் உள்ள முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த 25 ஆம் தேதி இரவு நேரத்தில் பெண்கள் சிலர், பயணம் செய்து உள்ளனர். அப்போது, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள், அந்த பெண்கள் சென்ற காரை வழிமறித்து சாலையின் குறுக்கே 2 கார்களையும் நிறுத்தி வழி மறித்து அடவடி செய்தனர்.
முக்கியமாக, அந்த பெண்கள் சென்ற காரானது, சம்பந்தப்பட்ட பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின் தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. இதனால், பொது மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் முதலில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். பின்னர், மேலும் ஒரு தனிப்படைகள் அமைத்து மொத்தம் 5 தனிப்படைகள் அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், அந்த இளைஞர்கள் பயணம் செய்த 2 கார்களையும், பொத்தேரியில் பறிமுதல் செய்தனர். அதில், ஒரு கார் இரும்புலியூரை சேர்ந்த சந்துரு என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு ஆகிய 4 பேருக்கும் வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முக்கியமாக, வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தான், முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு என்ற இளைஞரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.