காப்புரிமை… இந்த சொல்லின் வீரியமும், ஆழமும் சமீபகாலமாகத் தான் தமிழ் படைப்பாளிகளுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. அதுவும் இசைஞானி இளையராஜாவால் இன்னும் அதிகமாக, பேசுபொருளானது இந்த சொல்.
தனது பாடல்களை, இசைத்துணுக்குகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பிற படங்களில் பயன்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்படி இளையராஜா நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். உடனே இந்த ஆளுக்கு பணத்தாசை, அதனால் தான் இப்படி செய்கிறார் என்று ஏகத்துக்கும் எகத்தாளம் பேசப்படும். சமீபத்தில் அஜீத் நடித்த குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியபோதும் இதே கருத்து தான் சமூக வலைதளங்களில் உலா வந்தது.
நிற்க.
பொன்னியின் செல்வன்-2 படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெற்றது அனைவரும் அறிந்ததே. அதில் இடம்பெற்ற வீர ராஜ வீரா என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒன்றாகும். ஆனால் இந்த பாடல் தனது தந்தை நசீர் பயாசுதீன் டாகர் ( Nasir Faiyazuddin Dagar ) மற்றும் உறவினர் ஜாகிருதீன் டாகர் ( Zahiruddin Dagar) (இருவரையும் Junior Dagar Brothers என்று அழைப்பார்கள்) ஆகியோர் இணைந்து உருவாக்கிய பாடல் என்று அவரது மகன் பயஸ் வாசிபுதீன் டாகர் (Faiyaz Wasifuddin Dagar) உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவரும் இந்துஸ்தானி செவ்வியல் இசையில் மிகச்சிறந்த பாடகர் ஆவார். பத்மஸ்ரீ விருதாளரும் கூட.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிவஸ்துதி பாடலால் உந்தப்பட்டு (inspire) வீர ராஜா வீர பாடலை இயற்றியதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். ஆனால் இந்த வாதத்தை ஏற்க நீதிபதி பிரதீபா மறுத்துள்ளார். “வெறுமனே இன்ஸ்பயர் மட்டுமல்ல, சிற்சில மாற்றங்களுடன் முழுப்பாடலுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக” தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது இதற்கு வழக்கு நடைபெறும் காலம் வரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
காப்புரிமைச் சட்டத்தின் வலிமையை இப்போது புரிந்து கொள்ளுங்கள்.
இளையாராஜா ஏன் தன் பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு அடிக்கடி நோட்டீஸ் அனுப்புகிறார் என்றால், அவர் இசையமைத்த 1980,1990-களில் காப்புரிமை குறித்தும் அறிந்திருக்கவில்லை. அல்லது விண்ணப்பிக்கவில்லை. ஆனால் விளம்பர படவுலகின் பின்னணியில் இருந்து வந்ததாலும், கே.பாலச்சந்தர் – மணிரத்னம் போன்ற முன்னோடிகள் வழிகாட்டியதாலும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகளுக்கு முறைப்படி காப்புரிமை பெற்றள்ளார். இதனால் அவரது பாடல்களை வேறு எவரேனும் பயன்படுத்தினால் தன்னியல்பாகவே அவருக்குண்டான ராயல்டி தொகை வந்துவிடும். மீறி பயன்படுத்தவும் முடியாது. இந்த சட்டவாய்ப்பு இல்லாததால் தான் இளையராஜா மன்றாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இளையராஜா மட்டுமல்ல இனி எல்லா துறை கலைஞர்களும் உரிய முறையில் தங்கள் படைப்புகளை காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம். எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகும் அவர்களது குடும்பத்தினருக்கு பலகோடி ரூபாய் ராயல்டி தொகை கிடைப்பது இத்தகைய காப்புரிமைச் சட்டங்களால் தான். ஆனால் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பாவின் குடும்பத்தாரும் இன்று எந்த நிலையில் உள்ளார்கள். ஒருவேளை அவர்களது பாடல்களும் சட்டப்பூர்வ பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருந்திருந்தால் அவர்களல்லவோ கோடீசுவரர்களாக இருந்திருப்பார்கள்.
காப்புரிமை, கலைஞர்களை காக்கும் உரிமை..
– க.அரவிந்த்குமார்