கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 8 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவிக்கு கடந்த ஒராண்டாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பிடிக்காமல் கோட்டை விட்ட மத்தூர் காவல் துறையினரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், கடந்த ஒராண்டாக பாலியல் தொந்தரவு அளித்து வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கல்வித் துறையினர் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் சம்மந்தப்பட்ட “குட் டச், – பேட் டச்” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, மத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியிலும் “குட் டச், – பேட் டச்” குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
அப்போது, பாலியல் ரீதியான தொந்தரவு இருந்தால், சம்மந்தப்பட்ட ஆசிரியைகளிடமோ அல்லது 1098 என்ற இலவச மாவட்ட சைல்டுலைன் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, அப்பள்ளியின் ஆசிரியையிடம் தனியாக சென்ற 8 ஆம் வகுப்பு மாணவி, தான் ஒரு வருட காலமாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மாவட்ட சைல்டுலைன் எண்ணுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மாவட்ட சைல்டுலைன் அதிகாரிகள் மற்றும் மத்தூர் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனனர். இந்த சம்பவம் உண்மை என தெரிந்ததும், சம்மந்தப்பட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுள்ள சங்கரை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் கூலி வேலைக்காக பெங்களூரு சென்று உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட மத்தூர் காவல் அதிகாரிகள், புகார் குறித்து தெரிவித்து “உடனடியாக காவல் நிலையம் வருமாறு” அழைத்து உள்ளனர்.
அதற்கு மறுமுனையில் பேசிய சங்கர், “நாளை முதலாளியிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு பேருந்து ஏறி, மதியம் 2 மணிக்குள் வந்துவிடுவதாக” தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இன்று காலை முதல் சங்கரை தொடர்பு கொண்ட மத்தூர் காவல் அதிகாரிகள், “பேருந்து ஏறி விட்டதாகவும், மதியம் 2 மணிக்கு காவல் நிலையம் வந்து விடுவதாக தெரிவித்ததாக கூறி, 2 மணி வரை காத்திருந்தனர். ஆனால், மாலை வரை சங்கர் வராததால், மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்ச்சித்த போது, அவரது அலைபேசியை அணைத்துவிட்டு அவர் தலைமறைவானது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, தனிப்படை அமைத்து சங்கரை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளியை நேரில் சென்று பிடித்து வராமல், மத்தூர் போலீசார் கோட்டை விட்ட சம்பவம் மத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.