தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், “சமீபத்தில் தவெக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில், இஸ்லாமியர்களை அவமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், அதாவது இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களை கேவலப்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் உணருகிறது” என்று, குற்றம்சாட்டி உள்ளது.
அத்துடன், “பண்படுத்துவதற்காக நடத்தப்படும் இஃப்தார் போன்ற நிகழ்ச்சி, புண்படுத்தும் விதமாக நடந்தேறி உள்ளது என்றும், இந்நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கு கொஞ்சமும் வருத்தம் கூட தெரிவிக்காத விஜய், மனிதத்தன்மையற்ற நபரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது” என்றும், அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
“ஏற்கனவே விக்கிரவாண்டியில் த.வெ.கவின் முதல் மாநில மாநாட்டில் எவ்வித சரியான முறையில் முன் ஏற்பாடு செய்யாமல் மாநாட்டை நடத்தியதால், குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மாநாட்டுக்கு வந்த பலர் மயக்கமடைந்தனர்.
இஃப்தார் நிகழ்ச்சியிலும் எவ்வித முன் ஏற்பாடும் முறையாக செய்யாமல் விட்டதால் இங்கேயும் விபரீதங்கள் நடந்து உள்ளது. இது போன்ற தேவையற்ற விபரீதங்கள், விஜய் நடத்தும் நிகழ்ச்சியில் நடப்பது தொடர் கதையாகிக் கொண்டுருக்கிறது” என்றும், அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
“எனவே, மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று நடத்துவதாலும், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத வெளிநாட்டு பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு அலைவதாலும், இது போன்ற அத்து மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனியொரு முறை இது போன்று நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், தவெக கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுஉ ள்ளது.