முற்காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் ஒரு நாள்பட்ட நோயாக தான் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருந்தது. ஆனால், இன்றைய மாடர்ன் லைஃப்ஸ்டைல் மாற்றத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையுமே இந்த சர்க்கரை நோயால் சர்வ சாதாரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நமது உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும்பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அதிகமானலோ அல்லது குறைந்தாலோ உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், உடல் பருமன், மரபணு என பலக் காரணங்கள் இருக்கின்றன.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது ஒரு நோயல்ல; ஒரு வளர்ச்சிதை மாற்றக் கோளாறு. நாம் தினமும் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கக்கூடிய குளுக்கோஸ் (இரத்த சர்க்கரை) தான் உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாற வேண்டுமென்றால், இன்சுலின் என்ற ஹார்மோன் வேண்டும். பொதுவாக, இந்த ஹார்மோன் கணையத்தில் இருந்து உருவாகக்கூடியது. இது குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றலாக எடுத்துச் செல்லக் கூடியது.
அப்படி கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலினானது, சில நேரங்களில் போதுமான அளவு சுரக்காமல் போகலாம் அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாமல் போகலாம். அந்த மாதிரியான சமயத்தில் குளுக்கோஸானது இரத்தத்திலேயே தங்கிவிடும். நாளுக்கு நாள் இரத்தத்தில் இந்த குளுக்கோஸ் அதிகரித்துக் கொண்டு செல்வதே ‘நீரிழிவு நோய்’ என்று சொல்லப்படுகிறது.
இந்த நீரிழிவு நோய் வந்துவிட்டால், உயிருள்ள வரை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியுமே தவிர முழுவதுமாக குணப்படுத்த முடியாது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றுவது மட்டுமே ஒரே வழி.
சர்க்கரை நோயின் வகைகள்
பொதுவாக, சர்க்கரை நோயில் டைப் – 1 நீரிழிவு நோய் மற்றும் டைப் – 2 நீரிழிவு நோய் என இரண்டு வகை உண்டு. நமது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நிலையே டைப் – 1. இந்த வகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகளவில் உயரும். எனவே, இந்த வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக செயற்கை இன்சுலினை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரந்தும், அதை இரத்த குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உடல் செல்களால் முடியாமல் போகும் நிலையே டைப் – 2. எனவே, இந்த வகையால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற மாத்திரை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு சுகர் மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் சுகர் சாப்பிடலாமா?
பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கனவில் கூட நினைத்துப் பார்க்க கூடாது என்று நம்மில் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால், சுகர் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அதிகமாகி விடும் என்று கருத்து உண்டு. ஆனால், உண்மை இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, சுகர் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக் கூடியது தான். ஆனால், அதற்காக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்று கிடையாது. அதை மிதமாக சேர்த்துக் கொண்டால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பு: இத்தகவல் அனைத்தும் பல்வேறு வலைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை. எனவே, எந்தவொரு முயற்சியில் ஈடுபடுவதற்கும் முன்பும் சம்பந்தப்பட்ட நிபுணரிடம் ஆலோசனை செய்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.