தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ராஜமுருகன் மனைவி அளித்த புகாரில், அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
“குக்கூ”, “ஜோக்கர்”, “ஜப்பான்” உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ராஜுமுருகன். இதில், “ஜோக்கர்” படத்திற்காக இயக்குனர் ராஜுமுருகன் தேசிய விருதும் பெற்றார். தற்போது நடிகர் சசிக்குமாரை வைத்து படம் ஒன்றையும் அவர் இயக்கி வருகிறார்.
அதே நேரத்தில், இயக்குனர் ராஜமுருகன் பிரபல டிவி தொகுப்பாளனி ஹேமா சின்காவை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இயக்குனர் ராஜமுருகன் குடும்பம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல் பகுதியில் கேட்டட் கம்யூனிட்டி என்ற வகையான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் 2163 வீடுகள் இருக்கின்றன. சினிமாவின் பிரபல நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்தக் குடியிருப்பு பகுதியில் சில பாலியல் ரீதியான குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பாக இயக்குனர் மனைவியான ஹேமா, அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டு உள்ளார். குறிப்பாக, ஐயப்பன் தாங்கலில் உள்ள பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா என்ற குடியிருப்பில் கடந்த ஆண்டு புதிதாக வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். இவர்கள் தான் இந்த 2163 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரித்து வருகின்றனர்.
பிரபலங்கள் பலர் இந்த குடியிருப்பில் வசித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு தேவையான கட்டணங்களையும் வசூல் செய்து பராமரித்து வருகின்றனர். சங்க தலைவராக மரியா ஷங்கர் என்பவரும் செயலாளராக கௌரி சங்கர் மற்றும் பல அலுவலக நிர்வாகிகள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்புத் தொகை வசூலிக்கப்பட்டாலும், முன்கூட்டியே பராமரிப்பு முன் தொகை கொடுக்க வேண்டும் என பணத்தை முறைகேடாக வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் மனைவியான ஹேமா குடியிருப்பில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கைகளை கேள்வி எழுப்பியதாகவும், மேலும் பராமரிப்புக்கான முன் தொகை அளிக்க முடியாது என்றும், தெரிவித்ததாலும் இயக்குனர் மனைவி ஹேமாக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குடியிருப்பு சங்க நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் இயக்குனர் மனைவி புகார் அளித்து உள்ளார்.
முக்கியமாக, மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுமார் 22,000 பராமரிப்புத் தொகை கொடுக்கப்பட்டும் தன்னுடைய வீட்டிற்கு மட்டும் 20 நாட்களுக்கு மேலாக குப்பைகளை அல்லாமல் இருப்பது, மின்சார பிரச்சனை ஏற்பட்டால் சரி செய்யாமல் தவிர்ப்பது, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை தனது குழந்தைகளை பயன்படுத்த விடாமல் தடுப்பது, ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே சென்று வரும் பொழுது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வது என, தொடர்ந்து இயக்குனரின் மனைவி ஹேமாவிற்கு தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்து உள்ளார்.
மேலும், இயக்குனர் குடும்பத்தினர் முறையாக பராமரிப்பு தொகை செலுத்தவில்லை என்று, பொய்யான தகவல்களை மற்ற குடியிருப்பு வாசிகளுக்கு தெரிவித்து அவர்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், இதன் காரணமாக மற்ற குடியிருப்பு வாசிகளை, தன் குடும்பத்திற்கு எதிராக சங்க நிர்வாகிகள் திருப்புவதற்கு அவதூறு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
அத்துடன், கடந்த 9 மாதங்களாக இது போன்ற மன உளைச்சலை தொந்தரவுகளை சமாளித்து வந்ததாகவும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தாலும் பிரபலங்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் என்பதால், நிர்வாகிகள் அவர்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதாகவும் இயக்குனர் மனைவி ஹேமா குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நிலையில் தான், தமிழக முதல்வருக்கும் மற்றும் ஆவடி காவல் ஆணையருக்கும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் மனைவி ஹேமா சிங்காவின் புகாரில், எஸ் ஆர் எம் சி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குறிப்பாக, பிரெஸ்டிஜ் பிபெல்லா விஷ்டா அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்க தலைவர் மரியா ஷங்கர், செயலாளர் கௌரி சங்கர், மற்றும் அலுவலக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக, இந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்கத்திற்கு நிதியாக 13 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருப்பதாகவும், அதையும் தாண்டி விதிகளை மீறி பராமரிப்புத் தொகைகளை வசூலிப்பதாகவும் குறிப்பிட்ட சிலர் சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து ஒட்டு மொத்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளையும் கட்டுப்பாட்டில் வைத்து அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், குழந்தைகள் பெண்கள் என பிரபலங்கள் வசித்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிராக சங்க நிர்வாகிகள் கொடுக்கும் மன உளைச்சல் மற்றும் தொந்தரவுகள் அளிக்கும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இயக்குனர் ராஜு முருகனின் மனைவி ஹேமா போலீசாரிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.
இது குறித்து எஸ்.ஆர்.எம்.சி போலிசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.