“எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டுவதாகவும், பா.ஜ.க வுடன் கைகோர்க்க தான் அவர் டெல்லி சென்றதாகவும்” தி.மு.க கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தெரிவித்து உள்ளார்…
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதியை கடந்த சில மாதங்களாக விடு விக்காமல் இருப்பதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க வினர் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவாய் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க வினர் 100 நாள் வேலைக்கு செல்பவர்களுடன் போராட்டம் மேற்கொண்டனர். கோவை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கண்டன உரையாற்றிய தொண்டாமுத்தூர் ரவி, “மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்குவோம் என்று பிரதமர் மோடி கூறுவதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்றதை குறிபிட்ட அவர் இந்த பணத்தை தான் பெற்றுத் தரப் போகிறார் என்று எண்ணிய நிலையில் அவர்கள் ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்கு மோடியுடன் கைகோர்க்க சென்றதாக விமர்சித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரெய்டு நடத்துவோம், கூட்டணி சேர்ந்து கொள்ளுங்கள் என பா.ஜ.க மிரட்டுவதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் 2026 – ல் மீண்டும் முதலமைச்சரானால் தற்பொழுது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகை 2500 ரூபாயாக உயரும் எனவும் மோடி அரசு நிதி வழங்கவில்லை என்றால் முதலமைச்சர் சம்பாதித்து தருவார்” என்றும், அதிரடியாக பேசினார்.