“ரவுடி திருந்துனா விட்ருவாங்க இல்லைனா, போலீஸ் என்கவுண்டர் தான் போடுவாங்க” என்று பேசி, INSTAGRAM ரவுடிகளுக்கு வரிச்சியூர் செல்வம் அட்வைஸ் வழங்கி உள்ளார்.
மதுரையில் ஒரு காலத்தில் பிரபரல ரவுடியாக அறியப்பட்டவர் வரிச்சியூர் செல்வம். தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருகிறார்.
அதாவது, கோயம்புத்தூரில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க காவல் துறையினர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரிச்சியூர் செல்வம், “கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு, நான் ஜாலிமேனாக தான் இப்போது படம் பார்க்க, சாப்ட, டான்ஸ் ஆட என ஹேப்பியாக இருக்கிறேன். வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்ணு போடுகிறார்கள். அது தான், என் மீதான அவதூறுக்கு காரணம்” என்று, ஜாலியாக விளக்கம் கொடுத்தார் வரிச்சியூர் செல்வம்.
தொடர்ந்து பேசிய அவர், “போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக என் பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். ரவுடி திருந்துனா விட்ருவாங்க இல்லைனா போலிஸ் என்கவுண்டர் தான் போடுவாங்க” என்றும், வரிச்சியூர் செல்வம் குணமா பேசியது, அனைவரின் கவனத்தையும் பெற்று உள்ளது.
குறிப்பாக, “INSTAGRAMல் ரவுடி என கூறி வீடியோ வெளியிட்டால் கை, கால்கள் உடைக்கப்பட்டு ஜெயிலில் தான் இருக்கணும்” என்று, INSTAGRAM ரவுடிகளுக்கு வரிச்சியூர் செல்வம் அட்வைஸ் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதற்கு மேல் புதிய தங்க நகை வாங்க போவதில்லை என்றும், அதிக ரவுடிசம் உள்ள படங்களை பார்க்கமாட்டேன்” என்றும், வரிச்சியூர் செல்வம் பேசினார்.
தன் மீதான வழக்குப் பற்றி பேசிய வரிச்சியூர் செல்வம், “நான் எங்கும் செல்வதில்லை. போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக என் பேரன் – பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். நீங்கள் இப்போது கேட்பது தப்பான செய்தியாக உள்ளது.
என் தலைமையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த செய்தி கேட்டு அங்கு முடியாமல் ஆகிவிட்டது. நான் திருந்தி கல்யாணம் கச்சேரிக்கு போய்க்கொண்டிருக்கிறேன். ஒரு வருடத்தில் மட்டும் 15 திருமணத்தை நடத்தி வைத்து உள்ளேன். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை. நான் கோயம்புத்தூருக்கு சென்று 13 வருடம் ஆகிறது. அங்கு நான் செல்ல வாய்ப்பில்லை.
கோவையில் உள்ளவர்களிடமும் நான் எந்த தொடர்பிலும் இல்லை. என்னுடைய நண்பர் செல்லையா என்பவர் உள்ளார். அவரிடம் செல்போனில் பேசுவேன். அமைதியாக இருந்தாலும், எதற்கு என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆண்டவன் புண்ணியத்தில் எனது தந்தை நல்லா சம்பாதித்து வைத்திருக்கிறார். சொத்து உள்ளது. நான் எதற்கு எங்கும் செல்ல வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, “என்கவுண்டர்கள் நடப்பது குறித்து” செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “சேட்டை பண்ணினால் சுட தான் செய்வார்கள். திருந்தினால் காவல் துறையினர் விட்டுவிடுவார்கள். ஏதாவது தப்பு செய்தால் சுடாமல் என்ன செய்வார்கள்? ரவுடிசத்தை விட்டுவிட்டு ஒதுங்கி விட்டால், காவல் துறையினர் விட்டு விடுவார்கள். இல்லையென்றால், நான் கொலை செய்வேன் என கூறிகொண்டே ரவுடிசம் செய்தால், காவல் துறையினர் சுட்டு தான் பிடிப்பார்கள்” என்று, வரிச்சியூர் செல்வம் விளக்கம் கொடுத்தார். வரிச்சியூர் செல்வம் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.