ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ சங்கத் தேர்தலில் CPI(ML) Liberation கட்சியின் மாணவ அமைப்பான AISA-DSF கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இணை செயலாளர் பதவிக்கு ஆர்எஸ்எஸ்ஸின் மாணவ அமைப்பான ABVP வெற்றி பெற்றிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அமைப்புகளான SFI மற்றும் AISF தோற்றிருக்கின்றன.
SFI மற்றும் AISF அமைப்புகளை பிரதான எதிரிகளாக கருதிய BAPSA (Birsa Ambedkar Phule Student Association) அவற்றுடன் கூட்டணி வைத்ததுதான் இம்முறையின் விநோதம்.
இடதுசாரி முன்னணி என CPI, CPI(M), CPI(ML) கட்சிகளின் அமைப்புகள் ஒன்றாக மாணவ சங்கத் தேர்தலை இம்முறை சந்திக்கவில்லை. அந்தக் கூட்டணி முறிந்திருக்கிறது. மூன்று கூட்டணிகள் சந்தித்த இந்த தேர்தலில் CPI மற்றும் CPI(M) கட்சிகளின் அமைப்புகள் வெளியேற்றப்பட்டு ABVP நுழைந்திருக்கிறது.
ஏன் JNU-வின் இடது முன்னணி முறிந்தது?
பாசிசம், நவபாசிசம் பிரச்சினைதான்.
மாணவர் சங்கத் தேர்தலுக்கு முன் வைக்கப்படும் அமைப்பின் அறிக்கைகளில் SFI-ன் ஒருங்கிணைப்பாளர் திபாஞ்சன் மண்டல் வைத்த அறிக்கை வீழ்த்தப்பட்டது. தேசிய நிலவரம் குறித்து அறிக்கையில் இடம்பெற்ற பகுதியில் பாசிசம் என்கிற வார்த்தை ஒருமுறை கூட இடம்பெறவில்லை.
“இந்த தன்மை, பல்கலைக்கழகத்தில் அதிகரித்து வரும் தேசியவாத ஆதரவால் விளைந்தது,” எனப் பெருமைப்பட்டுக் கொண்டது ABVP.
CPI-ML Liberation-ன் AISA, “மோடி ஆட்சியின் பாசிசத்தன்மையை ஏற்காமல், பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியாது,” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் அது, “பேராசிரியர்களும் கல்லூரி நிர்வாகமும் ABVP உடன் இணைந்து செயல்படும் வெளிப்படையான தற்போதைய போக்கு, முன் எப்போதும் நேர்ந்ததில்லை. இந்தத் தன்மையின் தீவிரம் புரியாமல், குறைத்து மதிப்பிடுவது வரலாற்று தவறாக மாறும்!” எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
பல கவுன்சிலர் பதவிகளையும் பல்கலைக்கழகத்தின் இணைச் செயலாளர் பதவியையும் வென்று, JNU-வின் அதிகார தளங்களுக்கு 25 வருடங்களுக்கு பின் ABVP சென்றிருக்கிறது.
– ராஜசங்கீதன்