சரவணா ஸ்டோர்ஸின் 235 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
சென்னை தி.நகர் உட்பட தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ் துணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னை திநகர் பகுதியில் இயங்கி வந்த சரவணா கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017- ஆம் தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
வங்கியில் வாங்கிய இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்ததாக வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா என்பவர், சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், இந்த வழக்கில் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்தியன் வங்கியில் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 480 கோடி ரூபாயாக சேர்ந்தது. இதனையடுத்து, தி. நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளின் பொருட்களை ஜப்தி செய்து, கடைகளுக்கு சீல் வைக்க இந்தியன் வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 235 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி அதிரடியான நடவடிக்கையும் எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.