சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் செரிமானப் பிரச்சனைகளில் ஒன்று வயிறு உப்புசம். வயிற்றில் வாயு நிரம்பிவிடுவதால் வயிறு இறுக்கமாகவும், உப்பியது போலவும் இருப்பதையே வயிறு உப்புசம் (Bloating) என்பார்கள். உணவு சாப்பிட்டவுடனோ அல்லது சிறிது நேரம் கழித்தோ இந்த பிரச்சனை வரும்.
பொதுவாக, நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்காக இரைப்பையில் ஒருவிதமான அமிலங்கள் சுரக்கும். அந்த சமயத்தில் நாம் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால், அந்த அமிலங்கள் இரைப்பையின் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. இதுதான் வாயுவாக மாறி வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகிறது.
உணவு சாப்பிடாமல் இருப்பதால் ஒருபுறம் வயிறு உப்புசம் ஏற்பட்டாலும்; நாம் ரசித்து ருசித்து சாப்பிடும் பழங்களும் வயிறு உப்புசம், வாயு பிரச்சனையை ஏற்படுத்துமாம். அதற்கு பழங்களில் உள்ள பிரக்டோஸ், பாலியோல்ஸ் மற்றும் சர்பிடால் என்ற இயற்கை சர்க்கரைகளே காரணம். தற்போது, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் பழங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் பழங்கள்:
திராட்சை பழத்தில் இனிப்பு சுவையை தரக்கூடிய பிரக்டோஸ் என்ற இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது வாயு, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு 100 கிராமிற்கு மேல் சாப்பிட வேண்டாம். அதேபோல், உணவு சாப்பிட்ட உடனேயோ அல்லது வெறும் வயிற்றிலோ சாப்பிட வேண்டாம்.
பார்க்கும்போதே சாப்பிட தூண்டும் மாம்பழத்தில் பிரக்டோஸ் உள்ளது. ஒரே நாளில் அளவுக்கு அதிகமான மாம்பழத்தை சாப்பிடும் போது, வாயு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலியையும் ஏற்படுத்தும். எனவே, மாம்பழத்தை அப்படியே சாப்பிடாமல் ஜூஸ் அடித்து குடிக்கலாம்.
உண்ட உணவு எளிதாக ஜீரணிக்க வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். காரணம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நார்ச்சத்து குடலில் தங்கி வாயுவை உண்டாக்கும். எனவே, ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இந்த பழங்களை போலவே பின்வரும் பழங்களும் வயிறு உப்புசத்தை உண்டாக்கக் கூடியவை தான்;
ஆப்பிள்
பீச் பழம்
முலாம்பழம்
பேரிக்காய்
தர்பூசணி