“சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஒன்று தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்”, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேரி இருக்கிறது.
கட்டணம் செலுத்தாததால் அரசு பேருந்தை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடி அதிகாரிகள். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அரை மணி நேரம் அவதியுற்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கும்பகோணம் தஞ்சாவூர் இடையே இடை நில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து தஞ்சை – விக்கிரவாண்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேம்புகுடி சுங்கச்சாவடியில் வந்த பொழுது பாஸ்ட் ட்ராக் முறையில் கட்டணம் செலுத்துவதற்கான வரிசையில் நின்றது.
அப்போது அந்த பேருந்துக்கான கட்டணம் இல்லாததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி வைத்தனர். அப்போது பேருந்து ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினர். இதை அடுத்து அந்த பஸ் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்த பஸ்சில் பயணித்த பஸ் பயணிகள் அரை மணி நேரம் அவதிக்குள்ளானார்கள்.
அரசு பேருந்து நிறுத்தப்பட்டது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.