இன்றைய மாடன் லைஃப் ஸ்டைலில் எந்த இடத்தில் எதை செய்ய வேண்டும் என்ற ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. உதாரணமாக, படுக்கையில் சாப்பிடுவது, சோஃபாவில் உறங்குவது என பல வேலைகளை இப்படி தான் செய்துவருகிறோம். இதையெல்லாம் தாண்டி ஸ்மார்ட்போன் என்ற ஆபத்து. இந்த காலத்தில் சின்ன குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த ஸ்மார்ட்போன் இல்லாமல், ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற அளவிற்கு நம்மை அடிமைப்படுத்தி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை காலையில் கண் விழிப்பதில் இருந்து மீண்டும் இரவு உறங்கும்வரை சலிக்காமல் பயன்படுத்துகின்றோம். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், கழிவறையையும் விட்டுவைப்பது கிடையாது. இப்போதெல்லாம், கழிவறையை மலம் கழிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவது கிடையாது, செல்போன் பார்ப்பது, கேம் விளையாடுவது, புத்தகங்களை படிப்பது என்று நமக்கு தோன்றுவதை செய்யக்கூடிய ஒரு இடமாக கழிவறையை மாற்றிவிட்டோம்.
ஆனால் கழிவறையை 10 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தினால், நம் உடலுக்கு நாமே ஆபத்தை தேடிக்கொள்வதற்கு சமம். அதாவது, கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்துக் கொண்டு ஃபோன் உபயோகிக்கும்போது ஃபோனில் 18 மடங்கு கிருமிகள் பெருகுகிறது. நாம் கழிப்பறையில் அமர்ந்துக் கொண்டு ஃபோன் பார்க்கும்போது, ஃபோனின் மேற்பரப்பில் மலப்பொருளின் நுண்கிருமிகள் படியும். இதை நாம் மற்ற நேரங்களில் பயன்படுத்தும்போது, கைகளில் பரவி பின்னர் உடலுக்குள் சென்று தொற்றுநோயை உண்டாக்குகிறது.
அதேபோல், கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்திருப்பதால் மூலநோய் மற்றும் ஆசனவாயை சுற்றியிருக்கும் இரத்த நாளங்கள் விரிவடையும். அதுமட்டுமல்லாமல், பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயில் பல்வேறு நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். உண்மையில் குடல் இயக்கம் சரியில்லாமல் இருப்பதற்கான காரணமே, கழிப்பறையில் அதிக நேரம் செலவழிப்பதே. எனவே, இனி கழிப்பறையில் 10 நிமிடங்களுக்கு மேல் உட்காரும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.