Mon. Jun 30th, 2025

காது, மூக்கில் விஷம் ஊற்றி ஆணவக்கொலை – ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்..!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக்கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதாச்சலம் அடுத்த குப்பநத்தம் அருகேயுள்ள புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர், பொறியியல் பட்டதாரியான இவரும், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி இருவரும் கடலூர் சார் – பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

திருமணம் குறித்து பெண் வீட்டாருக்கு தெரிந்த நிலையில், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார் முருகேசன். பெண்ணை காணாமல் தேடிய கண்ணகியின் உறவினர்கள், 2003 ஜூலை 8ஆம் தேதி முருகேசனை பிடித்து அடைத்து வைத்துள்ளனர்.

மேலும், கண்ணகி விழுப்புரத்தில் இருக்கும் தகவலையறிந்த அவரது உறவினர்கள், முருகேசன் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவரை அழைத்து வந்துள்ளனர். பின்னர், முருகேசன் , கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து இருவரும் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், இருவரது சடலங்களையும் தனித்தனியாக எரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முருகேசனின் உறவினர்கள் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால், கண்ணகி – முருகேசன் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என குற்றம்சாட்டியிருந்த நிலையில், இருதரப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்படி விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ போலீசார், 2004ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி, முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், கண்ணகியின் தந்தை துரைசாமி உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையையும் வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஆணவக்கொலை என வழக்குப்பதிவு செய்ததை செல்லாது என உத்தரவிடக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, நடந்தது ஆணவக்கொலை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கண்ணகியின் அண்ணனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். மேலும், கண்ணகியின் தந்தை துரைசாமி உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்ட கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *