Mon. Jun 30th, 2025

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு மாட்டுப்பால் அல்லது பால் பவுடர் உணவாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

இருப்பினும், பாரம்பரியமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது, தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு, தாய் சேய் இருவருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. தற்போது, அந்த பாரம்பரிய பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

குறிப்பு: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வதற்கு முன்பு, உங்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வெந்தயம்:

தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் சக்தி வாய்ந்த பொருளாக வெந்தயம் உள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லதும் கூட. வெந்தயத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு, மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி குடித்துவரலாம். வெந்தயத்தை உணவு தாளிப்பின் போது சேர்க்கலாம்.

பெருஞ்சீரகம்:

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் மற்றொரு பாரம்பரிய பொருள் பெருஞ்சீரகம். இது வாய்வு, அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடியது. பெருஞ்சீரகத்தை பாலூட்டும் தாய்மார்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். இதன் ஆரோக்கிய நன்மைகளை தாய்ப்பால் மூலமாக குழந்தைகளும் பெறுவார்கள்.

பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து டீ மாதிரி குடிக்கலாம்.

எள்ளு:

பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் சத்து முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும். தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான கால்சியம் சத்தானது எள்ளில் எக்கச்சக்கமாக இருக்கிறது. எனவே, எள்ளை தொடர்ந்து சேர்த்துக் கொண்டு வந்தால் பால் சுரப்பு இயற்கையாகவே அதிகரிக்கும்.

கருப்பு எள், துருவிய தேங்காய், பேரீச்சம் பழம் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இடித்து அல்லது அரைத்து லட்டு செய்து சாப்பிடலாம். எள்ளுக்கு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் தன்மை இருப்பதால், ஒரு நாளைக்கு 1 உருண்டை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *