இன்றைய மாடர்ன் லைஃப் ஸ்டைலில் உடலில் நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் புதுவடிவம் எடுத்து வருகிறது. அந்தவரிசையில் ஏராளமானோர் சந்திக்கும் முக்கிய உடல் உபாதைகளில் ஒன்று தான் சிறுநீரக கல். இது எதனால் ஏற்படுகிறது பலரும் குழம்பி இருப்பார்கள். பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவிலும் சரி, குடிக்கும் தண்ணீரிலும் சரி பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட், கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கும்.
இவை அனைத்துமே நாம் சாப்பிட்ட பிறகு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். சில சமயங்களில், இந்த தாது உப்புகளின் அளவு இரத்தத்தில் அதிகமாகும் போது, சிறுநீரில் இருந்து வெளியேறாமல், உப்பு படிகம்போல் சிறுநீரகத்திலேயே படிந்துவிடும். இந்த உப்பு படிகத்தை தான் சிறுநீரக கல் என்பர். ஆரம்பத்தில் கடுகு போல தான் இருக்கும், அதுவே நாட்கள் செல்ல செல்ல எலுமிச்சை பழ அளவுக்கு வளர்ந்துவிடும்.
இதனால், கடுமையான இடுப்பு வலி, முதுகு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி போன்றவற்றை உண்டாக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் சிறுநீரக செயலிப்பும் ஏற்படலாம். இது நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால், பின்வரும் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
சிறுநீரக கல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சிறுநீரக கல் வராமல் தடுக்க முதலில் செய்ய வேண்டியது உப்பை குறைப்பது தான். நாம் தினமும் உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடும்போது, உப்பில் உள்ள சோடியம் குளோரைடு சிறுநீரகங்கள் வடிகட்ட வேண்டிய கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். பிறகு கல் உற்பத்திக்கு தான் வழிவகுக்கும். எனவே, முடிந்த வரை உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும்.
கோழி, முட்டை, சிவப்பு இறைச்சி, கடல் உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது, அவற்றின் மூலம் உடலுக்கு கிடைக்கும் புரதம் யூரிக் அமில அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும். எனவே, இவ்வகை உணவுகளுக்கு பதிலாக அதிகளவு புரதசத்து நிறைந்த தாவர உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
வேர்க்கடலை, பீட்ரூட், கேரட், பாதாம் பருப்பு, உலர் பழங்கள், முந்திரி பருப்பு, சேனைக் கிழங்கு, சோயாபீன்ஸ், பசலைக் கீரை போன்ற ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம். ஏனென்றால், இந்த ஆக்சலேட் சிறுநீரகத்தில் படிந்து சிறுநீரகத்தில் கல்லை உண்டாக்கிவிடும். அதற்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீர்க கல் வராமல் தடுக்க மற்ற வழிகளை விடவும், தண்ணீர் குடிப்பது தான் எளிமையான மற்றும் முக்கியமான வழியாகும். ஏனென்றால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள்.