“நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு!
சென்னை சிங்கம் IPL QR குறியீடு” சென்னை போலீஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் “சென்னை சிங்கம் IPL QR குறியீடு” என்ற நவீன வசதி அறிமுகம்.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் TATA IPL Season – 2025 கிரிக்கெட் போட்டிகள் 23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண பெருந்திரளான விளையாட்டு ரசிகர்கள், பொதுமக்கள் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கு வருகை தர உள்ளனர். இதன் பொருட்டு தகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், உயரதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இப்போட்டிகளை நேரில் காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி செல்வதற்கும், போட்டிகளை காண்பதற்கும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடவாமல் தடுப்பதற்கும், காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 23.03.2025 அன்று முதல் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக “சென்னை சிங்கம் IPL QR குறியீடு” என்ற நவீன வசதி சென்னை பெருநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை காணவரும்போது, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த QR குறியீடு மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு நடவடிக்கை எடுப்பார்கள்.
எனவே, சென்னை சிங்கம் IPL QR குறியீடு வசதியை பொதுமக்கள் தங்களின் அவசர காவல் உதவிகளுக்கு பயன்படுத்தி சென்னை பெருநகர காவல்துறையின் உதவிகளை பெறலாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.