இயேசுவின் கதையிலேயே சுவாரஸ்யமான இடம், கோவிலுக்குள் அவர் சாட்டையை சுழற்றுவதுதான்..!
வன்முறைக்கு எதிராக அன்பை போதிக்கும் பாத்திரமாக உருவகிக்கப்பட்ட நபர், கோவிலுக்குள் நுழைந்ததும் அங்கு நடக்கும் வணிகம், வரி பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு எதிராக சாட்டையை சுழற்றி, “கோவிலுக்குள் திருட்டுக் கூட்டத்துக்கு என்ன வேலை?” என யூத மதத் தலைவர்களுக்கும் ரோமானிய அதிகாரிகளுக்கும் எதிராக ‘நான் ஆணையிட்டால்’ எம்.ஜி.ஆர் போல அவர் நின்ற முரண்தான் சுவாரஸ்யம். இந்த முரணோடு சேர்ந்த பிற விஷயங்களால்தான் லத்தீன் அமெரிக்க புரட்சியாளர்கள், இயேசுவை இடதுசாரி என அவதானிப்பதும் கூட உண்டு.
இயேசு பாத்திரம் இருந்ததா இல்லையா என தெரியாது. இருந்திருந்தாலும் பைபிளில் சொல்லப்பட்டது போல நிச்சயமாக் இருந்திருக்க முடியாது. இல்லையெனில் ஒரு முக்கியமான அரசியல் போக்கின் முகமாக அவர் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு நாம் வரலாம்.
விரிவடந்து கொண்டிருந்த ரோம சாம்ராஜ்யம்தான் இயேசுவின் பிறப்பிடத்திலும் ஆட்சியில் இருந்தது. அதாவது நம்மூர் பிரிட்டிஷ் காலம் போல. அங்கும் நேரடி ஆட்சி இன்றி, ரோம சாம்ராஜ்ய பிரதிநிதியாக ரோம கவர்னரின் (கவர்னர்களே பிரச்சினைதான் போல) கட்டுப்பாட்டில்தான் அந்த நிலத்தின் வருவாய் நிர்வாகம் மற்றும் காவல் இருக்கும். ஆனால் அந்த நிலத்தின் நிர்வாகம் யூத மத குருமார்களிடம் இருக்கும்.
இயேசு வாழ்ந்த இடமும் ரோம கவர்னரின் ஆளுகைக்குள்தான் வருகிறது. எனவே ஓர் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான போராளிக் குழுக்கள் அங்கு இயங்கியதை நாம் யூகிக்கலாம். பைபிளிலே கூட யோவான் ஞானஸ்நானன் என்கிற பாத்திர கதை கிட்டத்தட்ட போராளி தன்மையில்தான் இருக்கும். இயேசுவின் பாத்திரத்துக்கே அவர்தான் ஞானஸ்நானம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயேசு, நேரடியாக ரோம ஆட்சியுடன் மோதாமல் யூத மதத்துடனேயே மோதுவார். அந்த மதம் போற்றும் வன்முறைக்கு எதிராகதான் அன்பை போற்றுகிறார் இயேசு. அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த சூட்சுமத்தில்தான் வருகிறது. அத்தகைய இயேசு பாத்திரம் நேரடியாக ரோம நிர்வாகத்துக்கு இடையூறு கொடுக்கும் இடம்தான் மேற்குறிப்பிட்ட காட்சி. அரசின் வரிப் பரிவர்த்தனைக்கு எதிராக முழக்கமிடுகிறார். அங்கிருந்துதான் அடுத்த மூன்று நாட்களில் சிலுவையேற்றத்துக்கான அவரின் பயணம் தொடங்குவதாக பைபிள் குறிப்பிடுகிறது.
ஆனால் வரலாற்றின்படி கிட்டத்தட்ட கிபி 200-லிருந்து கிறித்துவர்கள் என மத ரீதியாக தங்களை குறிப்பிட்டுக் கொண்ட குழுவினர் அரசை எதிர்த்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக வரிகொடா இயக்கம் அவர்களின் போராட்டமாக இருக்கிறது. எனவே அவர்களின் சொத்துகள் (உத்தரப்பிரதேசம் போலதான்) பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் வேட்டையாடப்படுகின்றனர். அவர்கள் கூடும் வழிபாட்டு இடங்களும் (சர்ச்) அழிக்கப்படுகிறது.
வரலாற்றில் முக்கியமான திருப்பம் கிபி 300-களில் நடக்கிறது. சர்வதேச வணிகத்துக்கு மையமான இடமாக இருந்த கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்த அரசனான லிசியானஸுக்கும் ரோமப் பேரரசன் கான்ஸ்டண்டைனுக்கும் மோதல் உருவாகிறது. வணிக மையத்தை கைப்பற்ற வேண்டிய இடத்தில் கன்ஸ்டண்டைன் இருக்கிறான். லிசியானஸோ கிறித்துவர்களுக்கு எதிராக கடுமையாக இயங்குபவன். கிறித்துவ குழுக்களின் போக்கை சமாளிக்கவும் வணிகத்தை சீராக்கவும் மிலான் நகரத்தில் ஓர் ஒப்பந்தம் போடப்படுகிறது. கிறித்துவர்களுக்கு எதிரான போக்கு கைவிட வேண்டும் என்கிற ஒப்பந்தம்.
அதற்கு பிறகு கொஞ்ச காலத்திலேயே லிசியான்ஸை வீழ்த்தி கான்ஸ்டாண்டினோபிளை தன் வயமாக்கிக் கொள்கிறான் கான்ஸ்டண்டைன். அரசியல் காரணங்களுக்காக அவன் கிறித்துவ மதத்தை தழுவுகிறான். கிறித்துவம் அரச மதம் ஆகிறது. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் சர்ச்சுக்கு ஒப்படைக்கப்படுகிறது. உலகின் பெரும் நில உடைமையாளராக வாடிகன் சர்ச் மாறுகிறது. இந்த கிபி 4 ஆம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில்தான் பைபிள், ஆட்சிக்கு ஏற்றார்போல தொகுக்கப்படுகிறது.
எனினும் ஆச்சரியம், ரோம ஆட்சி எப்படி வரிகொடா போராட்டத்தை ஒரு காட்சியாக பைபிளில் வைக்க அனுமதித்தது என்பதுதான்.
இயேசு என ஒரு பாத்திரம் உண்மையில் இருந்திருந்தால், அவர் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு முகாமில் இருந்ததாகதான் புரிந்து கொள்ள வேண்டும். மத முகமூடியை மாட்டிக் கொண்டு நடத்தப்படும் ஏகாதிபத்திய சுரண்டலை ஏடறிந்த வயது, பைபிளின் வயது. யூத மதம் உலகில் இன்னும் வட்டிக்கடைதான் நடத்துகிறது. ஆச்சாரியர்களை இன்றும் ஏகாதிபத்தியம் வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பண்பாட்டு ரீதியிலான அதன் அரசியலை புரிந்து கொள்ளும் புரட்சியாளர்களுக்குதான் பஞ்சம் நிலவுகிறது.
மறுதலிப்புகளும் சிலுவை பலிகளும் மட்டும் மாறவே இல்லை!
– ராஜசங்கீதன்