இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தன்னுடைய குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை.
அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். சரி வாங்க, குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
பால்:
புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு பல் ஆரோக்கியமாக இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, தயிரை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
மீன்கள்:
ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கியமான உணவுப் பொருளாக மீன்களும், பிற கடல் உணவுகளும் இருக்கின்றன. ஏனென்றால், அவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதே முக்கியமான காரணம்.
அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முட்டை:
முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் கொட்டி கிடக்கின்றன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் ஆக்டிவாகவும் ஹாப்பியாகவும் வைத்துக்கொள்ள உதவும் “செரடோனின்” என்ற ஹாப்பி ஹார்மோன் உற்பத்திக்கும் முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.
நட்ஸ்:
வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும், இவை மூளையில் ஏற்படக்கூடிய ‘அல்சைமர்’ என்று சொல்லக்கூடிய மறதி நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5-6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுங்கள். குறிப்பு: பாதாம் பருப்பை ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டு கொடுக்கவும்.
ஆரஞ்சு பழம்:
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது ஆரோக்கியமான மூளைக்கு மிகவும் முக்கியமான சத்து என்றே சொல்லலாம். ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, வாரத்தில் மூன்று முறையாவது ஒரு முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட குடுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடக் கூடாது.