பழனி முருகன் கோயிலில் முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கி உள்ளனர்.
பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு படையெடுத்த வந்த வண்ணம் உள்ளனர்.
பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. அதன்படி, நாளை பங்குனி உத்திர விழா தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அத்துடன், பங்குனி உத்திர திரு விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து உள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
மேலும், பங்குனி உத்திரத் திரு விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய இன்று முதல், அடுத்த மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அத்துடன், மலைக் கோயில் செல்லும் பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் யானை பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
முக்கியமாக, கோயிலின் பாதுகாப்பு பணியில் தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால், பழனி நகரமே திருவிழா கோலம் பூண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.